Tuesday, July 3, 2018

விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஏற்பட்ட சர்சையால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு


விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில்
ஏற்பட்ட சர்சையால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு


சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
“2009இற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமான உணரும் நிலையில் இருக்கிறோம். நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமாக இருந்தால், நாங்கள் வீதிகளில் நிம்மதியாக நடமாட வேண்டுமானால், எமது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று பாதுகாப்புடன் திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும். என, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் பெரும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
இதன்போது, அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் விடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்பட்டதால் நாடாளுமன்ற அமர்வை நாளை (04) காலை வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

No comments:

Post a Comment