Friday, November 30, 2018

கூட்டமைப்பு, ஐதேகவுக்கு ஒதுக்கிய நேரத்தில் மஹிந்தவுடன் இருந்த ஜனாதிபதி


கூட்டமைப்பு, ஐதேகவுக்கு ஒதுக்கிய நேரத்தில்
மஹிந்தவுடன் இருந்த ஜனாதிபதி


ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும், ஐக்கிய தேசிய முன்னணியுடன் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னரே சந்திப்பை மேற்கொண்டிருந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.நேற்றுமாலை 6 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், மாலை 7 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியையும் சந்திப்புக்கு அழைத்திருந்தார்.  
எனினும், நேற்றுமாலை 6 மணிக்கு கூட்டமைப்பை சந்திப்பதற்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த நேரத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

சுகததாச அரங்கில் நேற்றுமாலை, 7000 சமுர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தற்போதைய அரசாங்கம் செல்லுபடியற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறப்படும் நிலையில், அவசர அவசரமாக இந்த நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில், மஹிந்த ராஜபக்ஸவும், மைத்திரிபால சிறிசேனவும் மகிழ்ச்சியாக அளவளாவிக் கொண்டிருந்தனர்.

கூட்டமைப்பு, மற்றும் ஐதேமுவுடன் சந்திப்பதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மஹிந்த ராஜபக்ஸவுடன், ஜனாதிபதி, ஒன்றாக நிகழ்வில் பங்கேற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், குறித்த நேரத்தில் இருந்து சுமார் ஒன்றரை மணிநேரம் கழித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு மைத்திரிபால சிறிசேன வருகை தந்தார்.

இதனால், ஐக்கிய தேசிய முன்னணியுடனான சந்திப்பு இரவு 8.30 மணிக்குப் பின்னரே இடம்பெற்றது.

ஜனாதிபதியின் இந்த தடுமாற்றத்தினால், அரசியல் வட்டாரங்களில் நேற்றிரவு பரபரப்புக் காணப்பட்டது.


ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனான பேச்சில் இழுபறி இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை மீண்டும் நாளை சந்திக்கிறார் மைத்திரி


ஐக்கிய தேசிய முன்னணியின்
தலைவர்களுடனான பேச்சில் இழுபறி
இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை
மீண்டும் நாளை சந்திக்கிறார் மைத்திரி



தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்து, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன், நேற்றிரவு நீண்டநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்திய போதும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு, இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.

இந்தப் பேச்சுக்களில், ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவில்லை. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான, ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், திகாம்பரம், மனோ கணேசன், ராஜித சேனாரத்ன, அகில விராஜ் காரியவசம், சஜித் பிரேமதாச, ஜயம்பதி விக்ரமரத்ன, மலிக் சமரவிக்ரம, கயந்த கருணாதிலக, லக்ஸ்மன் கிரியெல்ல, கபீர் ஹாசிம் ஆகியோர் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுக்களின் போது, நாடாளுமன்றத்தில் இன்னொரு பிரேரணையைக் கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஐதேமு தலைவர்களிடம் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனினும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விவகாரத்தில், இணக்கப்பாடு ஏதும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், மீண்டும் நாளை சந்தித்துப் பேச்சு நடத்துவது என்று இருதரப்பும் முடிவு செய்துள்ளன.

இந்தச் சந்திப்பில் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று றிசாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியுடனான சந்திப்பு சாதகமானதாக இருந்தது என்று ஐதேக பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியைச் சந்தித்த பின்னர், ஐதேமு தலைவர்கள் அலரி மாளிகைக்குச் சென்று, ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுக்களின் விபரங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.


எதிர்வரும் 05ஆம் திகதி பிரேரணை கொண்டு வரக் கோரினார் மைத்திரி புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்றும் தெரிவிப்பு


எதிர்வரும் 05ஆம் திகதி
பிரேரணை கொண்டு வரக் கோரினார் மைத்திரி
புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்றும் தெரிவிப்பு



புதிய பிரதமரை நியமிக்குமாறு எதிர்வரும் 05ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால், புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்று, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 13 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் பின்னர், தகவல் வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன், “ தற்போது பிரதமராகச் செயற்படும், மஹிந்த ராஜபக்ஸவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்றும், புதியதொரு பிரதமரை நியமிக்குமாறும், நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 05ஆம் திகதி பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றுமாறும், அதற்கமைய புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.” என்று கூறினார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு கோரினால் அதனைத் தான் ஏற்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியாத நிலை காரணமாகவே அவரை நீக்கியதாகவும், எனவே அவரை மீண்டும் நியமிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், எதிர்ப்பு வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக எதிர்வரும் 5ஆம் திகதி, புதிதாக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருமாறு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நேற்றைய சந்திப்பின் போது, கூறியதாக சந்திப்புக்குப் பின்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவமோகன் கூறியிருந்தார்.

எனினும், இதனை நிராகரித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன்,

இது புதிய நம்பிக்கையில்லா பிரேரணை அல்ல. சபையில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியைக் கோரும் வகையில், ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையே எதிர்வரும் 5ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும்என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.



தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவி விலகத் தயாராகும் மஹிந்த!


தோல்வியை ஏற்றுக்கொண்டு
பதவி விலகத் தயாராகும் மஹிந்த!



பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமரும் ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிடம் மஹிந்த இது தொடர்பில் அறிவித்துள்ளார் என ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தான் இராஜினாமா செய்கின்றமையினால் பிரதமர் பதவி ஏற்குமாறு மஹிந்த, ரணிலிடம் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஐக்கிய தேசிய கட்சி தலைவர், ரணில் விக்ரமசிங்கவை நேற்று நாடாளுமன்ற நூலகத்தில் திடீரென சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பதவி விலக தேவையில்லை, மைத்திரி பெரும்பான்மையை நிரூபித்து பதவியில் இருந்து நீக்கும் வரை தொடர்ந்து செயற்படுமாறு ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான உரிமை உள்ளதாகவும், தங்களை பிரதமர் பதவியில் நியமித்த ஜனாதிபதியே அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க, மஹிந்தவை சந்தித்த போது குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமையினால் மஹிந்த பதவி விலகத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க 123 என்று அறுதிப் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பல தடவைகள் நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாகும் மெகா கூட்டணி!


ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில்
 உருவாகும் மெகா கூட்டணி!



மஹிந்த - மைத்திரி தரப்புக்கு எதிராக அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மெகா கூட்டணிக்கான யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் இந்த கூட்டணியை புதிய பெயரிலும் புதிய சின்னத்திலும் பதிவு செய்ய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மெகா கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டணியில் ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து வந்த அணியினர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த சிலரும் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பல காலமாக தனது கட்சி சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னங்களில் போட்டியிட்டு வந்ததுடன் ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்தும் தனது யானைச் சின்னத்திலேயே தேர்தல்களில் போட்டியிட்டது. எனினும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய சின்னத்தின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது.

மெகா கூட்டணி தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள யாப்பில் கட்சிகளின் தனித்துவத்தை பாதுகாக்கும் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டால், கூட்டணியிலும் அங்கத்துவம் பறிபோகும் வகையிலும் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


சபாநாயகரிடம் முன்னாள் அமைச்சர் ரிஷாத் விடுத்த முக்கிய கோரிக்கை!


சபாநாயகரிடம் முன்னாள் அமைச்சர் ரிஷாத்
விடுத்த முக்கிய கோரிக்கை!


நீண்டகால இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரச மாவட்ட செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையை இரத்துச் செய்து, புதிய வேலைத்திட்டத்தை நிறுத்த எழுத்துமூலம் உத்தரவிடுமாறு சபாநாயகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே, இந்த வேண்டுகோளை அமைச்சர் விடுத்தார்.

இந்த வேலைத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கொள்கைத் திட்டமிடல் அமைச்சின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது.

எனினும், குறித்த வேலைத்திட்டத்தில் 250 மில்லியன் ரூபாய்க்கான நிதி நிறுத்தப்பட்டு, புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றின் மூலம் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படையில், புதிய அரசு தோற்கடிக்கப்பட்டதை கருத்திற்கொண்டு, புதிய வேலைத்திட்டத்தை நிறுத்துமாறு, எழுத்துமூலம் பணிப்புரை விடுங்கள் என்றும் சபாநாயகரிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.



பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு


பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமைக்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு
டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு


புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சமகால அமைச்சரவை ஆகியவற்றுக்கு சட்டரீதியாக அனுமதியில்லை எனவும், அவர்களின் நியமனங்களை ரத்து செய்யுமாறும் கோரி ஐக்கிய தேசிய கட்சியினால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் 122 உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

மனு மீதான வழக்கை மேல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபயசேகர ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்‌ஸவுக்கு, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடையாதென, சபாநாயகரால் உறுதிசெய்யப்பட்டுள்ளதென, ஜனாதிபதி சட்டத்தரணி ஈ.கனகேஸ்வரனால், இன்று (30), மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மஹிந்தவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், தொடர்ந்தும் அவர் அந்தப் பிரதமர் பதவியில் நீடிப்பது உகந்ததல்லவென, சட்டத்தரணி எடுத்துக் கூறினார்.

மஹிந்த உள்ளிட்ட அமைச்சரவைக்கும் பிரதமர் பதவியை அவர் வகிப்பதற்கும், சட்ட ரீதியில் அதிகாரம் இல்லையெனத் தீர்ப்பளிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் கைச்சாத்திட்டு தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமைப் பேராணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (30) ஆராய்ந்த போதே, சட்டத்தரணி கனகேஸ்வரன், மேற்கண்டவாறு கூறினார்.

இதனால், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம், மஹிந்த ராஜபக்ஷவால், பிரதமர் பதவி வகிப்பதற்கு சட்ட ரீதியான அதிகாரம் கிடையாதெனவும், சட்டத்தரணியால் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கைச்சாத்திடப்பட்ட நிலையிலேயே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது


ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் ஏ.பி.எஸ்.
இந்தியாவில் வெளியானது

ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் ஏ.பி.எஸ். இதன விலை இந்திய ரூபாவில் ரூ.2.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்களிலும் முன்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபேக்ட்ரி-கஸ்டம் வெர்ஷன் ஸ்டான்டர்டு மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய மாடலின் ஃபியூயல் டேன்க், ஹேன்டில் பார், அலாய் வீல் மற்றும் டியூப்லெஸ் டையர் உள்ளிட்டவற்றில் பிராகசமான நிறங்கள் பூசப்பட்டுள்ளது. புதிய ஏ.பி.எஸ். மாடலின் விலையை வைத்து பார்க்கும் போது, தன்டர்பேர்டு 500 எக்ஸ் அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த சிங்கிள்-சிலிண்டர் மோட்டார்சைக்கிளாக இருக்கிறது.

ஏ.பி.எஸ். பாதுகாப்பு வசதி தவிர, புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மோட்டார்சைக்கிளிலும் 499சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 41 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள், இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கி, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில், அந்நிறுவனம் கிளாசிக் 350 சிக்னல்ஸ், கிளாசிக் 500, ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், தன்டர்பேர்டு 350 எக்ஸ் உள்ளிட்டவற்றில் ஏ.பி.எஸ். வசதியை வழங்கி வருகிறது.




மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு



மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி நீர்ப்பாசனத் திட்டமான மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (30) முற்பகல் 11 மணிக்கு திறந்து வைத்தார்.
மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் அதி உயர் நீர்மட்டம், 185 கனமீற்றராகும். இந்த நீர்மட்டம் பூர்த்தியான நிலையிலேயேநீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுஅம்பன் கங்கைக்குநீர் திறந்துவிடப்பட்டது.