Thursday, February 28, 2019

இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம் – வெளியானது தீர்மான முன்வரைவு


இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம்
வெளியானது தீர்மான முன்வரைவு



ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளன.

இதற்கான தீர்மான முன்வரைவு,  இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்என்ற தலைப்பில், ஜெனிவாவில் உள்ள பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் நேற்று உலாவ விடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்த வரைவில், 2021 மார்ச் மாதம், விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விரிவான அறிக்கையுடன், பேரவையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் அந்த வரைவில் கூறப்பட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்த வரைவில், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு


இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார்
- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு
   
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

அபினந்தனை விடுவிப்பதற்காக இந்தியா ராஜாங்கரீதியாக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், வூதி அரேபியா போன்ற நாடுகள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதற்கிடையே, அபினந்தன் விவகாரம் பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என அறிவித்துள்ளார்.





முதலாவது மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர், ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு


முதலாவது மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர்,
ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நேற்று முன்தினம் (26) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

கடந்த கால யுத்த அனுபவங்களை பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை கடந்த 71வது தேசிய தின விழாவின்போது காட்சிப்படுத்தப்பட்டன.

ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கலாநிதி டிரான் டி சில்வாவினால் இந்த மாதிரி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது





10 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது


10 கோடி ரூபாய் பெறுமதியான
போதைப் பொருளுடன் ஒருவர் கைது

மோட்டார் சைக்கிளில் 10 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்ற ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் மாவட்டத்தில் உள்ள குளியாப்பிட்டி - ஹெட்டிபொல வீதியின் கும்புறுபொல சந்தியில் வைத்து சந்தேக நபரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குளியாப்பிட்டிய, நாகொல்லாகொட அம்பகமகும்புர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் போதைப் பொருள் விற்பனையாளருக்கு சொந்தமான இந்த போதைப் பொருளை சந்தேக நபர், எடுத்துச் சென்று விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




அலுகோசு பதவிக்கு 102 விண்ணப்பங்கள் அமெரிக்க பிரஜை ஒருவரும் விண்ணப்பம்


அலுகோசு பதவிக்கு 102 விண்ணப்பங்கள்
அமெரிக்க பிரஜை ஒருவரும் விண்ணப்பம்



தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு 102 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 101 விண்ணப்பங்கள் இலங்கையர்கள் அனுப்பியுள்ளதுடன் ஒரு விண்ணப்பம் அமெரிக்க பிரஜை ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பதாரிகளில் 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் உரிய கல்வி தகுதி இல்லாதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

ஏனைய விண்ணப்பதாரிகள், நேர்முகப் பரீட்சைக்காக அடுத்த சில தினங்களில் அழைக்கப்பட உள்ளனர்.

நேர்முக தேர்வுகள் நடக்கும் தினம் மற்றும் தெரிவு செய்யப்படும் இரண்டு நபர்களின் தகவல்களை இரகசியமாக வைக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.



Wednesday, February 27, 2019

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை விவகாரம் வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நேரடி நிகழ்ச்சியில் அதிரடியான கேள்விகளும் தெளிவில்லாத பதில்களும்


சாய்ந்தமருதுக்கு  தனியான உள்ளூராட்சி சபை விவகாரம்
வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நேரடி நிகழ்ச்சியில்
அதிரடியான கேள்விகளும் தெளிவில்லாத பதில்களும்



இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நேரடி நிகழ்ச்சியில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை விவகாரம் குறித்து பேசுவோம் பேசுவோம் இன்னும் பேசுவோம் எனக் கூறுவதன் அர்த்தம் என்ன? சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை இழுத்தடிப்போம், இழுத்தடிப்போம் பதவிக்காலம் வரை இழுத்தடிப்போம் என்று சொல்லாமல்  சொல்வதைப்போல் இருந்தது.
பேசுவோம் பேசுவோம் எனக் கூறும் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை தன்னாலோ  அல்லது அமைச்சர்களாலோ அல்லது ஜனாதிபதி , பிரதமரா லோ தீர்வு வழங்க முடியாது என்று சொல்வதும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை என்னால் செய்ய முடியாது என்று சொல்லாமல்  சொல்வதைப்போல் இருந்தது.

பிரதேச அடிமட்டத்தில் இருந்து தீர்வு வரவேண்டும் என்று கூறுவதன் அர்த்தம்   என்ன என்பது மக்களுக்கு புரியாத புதிர்போன்று உள்ளது.
சாய்ந்தமருது மக்களுக்கு தேவையான தனியான உள்ளூராட்சி சபையைப் பெறுவதற்கு தங்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம்தான் பேசவேண்டும் அதைவிடுத்து சாய்ந்தமருது  மக்கள் யாருடன் பேசவேண்டும் எதற்காக பேசவேண்டும் ?
இது சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை இழுத்தடித்துக் கொண்டு செல்லும் கபட நாடகமாக உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது மாத்திரமல்லாமல், இன்று பேசுவோம், பேசுவோம் என்று சொல்பவர்கள் தேர்தல் காலங்களில் பொது மேடைகளிலும், பள்ளிவாசல்களிலும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை கல்முனையில் உள்ள சகல ஊர் மக்களுடன் பேசியே அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களால் அன்று வழங்கப்பட்டதா? என்ற கேள்வியை சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் சகல ஊர்களுடன் பேசி தீர்க்கமான முடிவு எட்டப்படும் என்று கூறுபவர்களிடம் எழுப்பப்படுகின்றது.

அன்று எங்களால்தான் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையை பெற்றுத் தர முடியும் என்று பொது மேடைகளில் பகிரங்கமாகக் கொக்கரித்தவர்கள் இன்று தன்னாலோ  அல்லது அமைச்சர்களாலோ அல்லது ஜனாதிபதி  பிரதமராலோ தீர்வு வழங்க முடியாது அடிமட்டத்தில்தான் பேச வேண்டும் என்று சொல்வதற்கான அர்த்தம் என்ன? எங்களால் பெற்றுத்தர விருப்பமில்லை என்பதன் மாற்றுப்பேச்சா இது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எச்.எம்.எம்.ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராகவும் இப்பிரதேச மக்கள் பிரதிநிதியாகவும் இருந்து கொண்டு கல்முனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பலத்தோடு உள்ளார்.

இவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சாய்ந்தமருது தோடம்பழ உறுப்பினர்கள் கொண்டுள்ள நெருங்கிய உறவைக் கொண்டு இவர்கள் மூலம் சாய்ந்தமருது மக்கள் தங்கள் பிரச்சினையை சுலபமாக கையாண்டு யாருக்கும் பாதகமில்லாமல் அவர்களுக்குள் பேசி தீர்க்க கிடைத்துள்ள அரியதொரு சந்தர்ப்பமாகும் என இராஜாங்க அமைச்சர் அதிர்வில்  கூறியதன் அர்த்தம் என்ன? பந்தை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பக்கம் அடித்துவிட்டு இப்பிரச்சிணையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான முயற்சியா இது எனவும் மக்கள் வினவுகின்றனர்.
                                                                     
இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அதிர்வு நிகழ்ச்சியில் பல உண்மைகளை செருமலுடனான தனது பதிலில் ஒப்புக்கொண்டுள்ளார் ,   அமைச்சர் ரிசாத் பதியுதீனை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம் என்று கூறி அதில் தான் பலஹீனமானவன் என்பதை பலமுறை ஒப்புக்கொண்டுள்ளார். அதிர்வு நிகழ்ச்சியில் அவர் அளித்த பதில்களை அவதானிக்கின்றபோது அவரின் ஆளுமை கேள்விக்குறியாகவே காணப்பட்டது.
ஏ.எல்.ஜுனைதீன்


ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள்





ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள்

எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் பங்கேற்றனர்.

மைத்திரிபால சிறிசேனவும் சந்திரிகாவும் அண்மைக்காலமாக சந்தித்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அதுபோன்றே மஹிந்த ராஜபக்ஸவை சந்திரிகா கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

இவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் நேற்றைய நிகழ்வில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜோன் அமரதுங்கவின் பங்களிப்பை தன்னால் மறக்க முடியாது என்று கூறினார்.

அத்துடன், மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர் என்பதால் தான், அவரால் நீண்ட காலம் அரசியலில் நிலைத்திருக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை விவகாரம்: அமைச்சர் வஜிர அபேவர்தனவைச் சந்தித்த கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சை குழு உறுப்பினர்கள்




சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை விவகாரம்:

அமைச்சர் வஜிர அபேவர்தனவைச் சந்தித்த
கல்முனை மாநகர சபையின்
சாய்ந்தமருது சுயேட்சை குழு உறுப்பினர்கள்

கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சை குழு உறுப்பினர்களும், மற்றும் கொழும்பு போறம் (Colombo Forum) என்றழைக்கப்படும் சாய்ந்தமருதூரைச் சேர்ந்த கொழும்பு வாழ் பிரமுகர்களும் நேற்று 27ம் திகதி மாலை, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவை, அவரது இல்லத்தில் சந்தித்து சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையின் தேவை குறித்தும் இதிலுள்ள இழுபறிகள் குறித்தும் தெளிவாகவும் விளக்கமாகாகவும் பேசியுள்ளார்கள்.

சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபையை உருவாக்குவது சம்பந்தமாக கடந்த 26ம் திகதி அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுவின் பேச்சு வார்த்தையிலோ அல்லது சாய்ந்தமருது நகரசபை விடயத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிலோ, சாய்ந்தமருதில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம் மக்களின் ஆணையைப் பெற்று சாய்ந்தமருதில் இருக்கும் ஒரேயொரு அரசியல் அதிகாரம் பெற்ற ஒண்பது மாநகர சபை உறுப்பினர்களின் சார்பாக யாரும் அழைக்கப்படவோ அல்லது சேர்த்துக் கொள்ளப்படவோ இல்லை என்பதை மிகவும் அழுத்தமாக இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் வஜிர அபேவர்தன, சாய்ந்தமருது மக்கள் சார்பாக, அக்குழுவிற்கு பிரதிநிதி ஒருவரை உடனடியாக தெரிவுசெய்து தருமாறு அமைச்சரைச் சந்தித்த குழுவினரைக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஏகமனதான தீர்மானத்துடன் ஒருவரின் பெயரை அமைச்சருக்கு வழங்கியுள்ளார்கள்..





பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் விமானி அபினந்தனின் தந்தையின் உருக்கமான அறிவிப்பு


பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் விமானி
அபினந்தனின் தந்தையின் உருக்கமான அறிவிப்பு




எனது மகன் குறித்த தகவல்களை பற்றி கூறும் நிலையில் இல்லாததால் தயவு செய்து எங்களை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய விமானி அபினந்தனின் தந்தை ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியாவை சேர்ந்த மிக்-21 ரக விமானத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது அந்நாட்டு ராணுவ வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அந்த விமானத்தில் இருந்து குதித்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கினார்.

கைதான விமானி அபிநந்தன் பெயர் மற்றும் விமானப்படையில் தனது அடையாள எண் ஆகியவற்றை வீடியோவுடன் பாகிஸ்தான் வெளியிட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அபினந்தன் சென்னையை சேர்ந்தவர் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. விமானி அபினந்தன் சென்னை, தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்றவர்.

2004ம் ஆண்டு முதல் இந்திய விமானியாக பணியாற்றி வருகிறார். இவரது பூர்வீகம் கேரளா என்றாலும் சென்னையில் இவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது தந்தை வர்தமான் விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றியவர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் சேகரிக்க செய்தியாளர்கள் சென்றபோது சென்னை, சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள ஜல்வாயூ விஹார் இல்ல கேட்டை அபினந்தனின் பெற்றோர்கள் பூட்டி விட்டனர்.

இதுகுறித்து அபினந்தனின் தந்தை வர்தமான், விங் கமெண்டரான எனது மகன் பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

அதுகுறித்து பேசும் மனநிலையில் நாங்கள் தற்போது இல்லை. ஆகையால் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்’’ என எழுதி அவர் கேட்டில் மாற்றி உள்ளாராம்.


இரு இந்திய விமானிகளை சிறைப்பிடித்துள்ளோம், பாகிஸ்தான் தரப்பில் தெரிவிப்பு (வீடியோ இணைப்பு)


இரு இந்திய விமானிகளை சிறைப்பிடித்துள்ளோம்,

பாகிஸ்தான் தரப்பில் தெரிவிப்பு
(வீடியோ இணைப்பு)







பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய வான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் வான் எல்லையில் நுழைந்த இரு இந்தியப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய விமானிகள் இருவரை சிறைபிடித்துள்ளோம் என்றும், அவரிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை சிறை பிடித்துள்ளதாக செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்தார்.

பிடிபட்ட விமானிகளின் ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்னொருவர் தங்கள் காவலில் இருப்பதாகவும் ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார்.

காவலில் இருக்கும் விமானியின் காணொளி என்று கூறப்படும் காணொளி என்று ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
பாகிஸ்தான் படைகள் திறன் வாய்ந்தவையாக உள்ளன. எனினும் நமது நோக்கம் அமைதிதான் என கூறியுள்ள ஆசிஃப் கஃபூர் ஊடகங்களும் பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால் எதிர்கொள்ளத் தயார் என்றும், இரு இந்திய விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் F16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்திய ஊடகங்களை காட்டுகின்றன. இந்த தாக்குதலில் அந்த ரக விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தவே இல்லை என ஆசிஃப் கஃபூர் மறுத்துள்ளார்.

நிலைமையை மோசமடையச் செய்யத் தாங்கள் விரும்பவில்லை. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தப் பிராந்தியத்தின் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் ஆறு ராணுவ மற்றும் நிர்வாக நிலைகளை குறிவைத்தோம். அவற்றின் மேல் தாக்குதல் நடத்துவது நோக்கமல்ல என்பதால், திறந்த வெளியிலேயே தாக்குதல் நடத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.

இது உண்மையான தாக்குதல் நடவடிக்கை அல்ல, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்கும் திறனை வெளிக்காட்டும் செயல்பாடு மட்டுமே என ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார்.

இதேவேளை,அமைதியைக் கடைபிடிக்குமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மீண்டும் வலியுறுத்துவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் தெரிவித்துளார்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் 12 முதல் 15 இடங்களில், செவ்வாய் இரவு பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு படைகளின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இந்தியா தங்கள் நிலையை பிரசாரம் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அங்கு விரைவில் தேர்தல் வருவதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் குரேஷி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் படைகளின் தயார் நிலையை கேள்விக்கு உட்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல என்று கூறியுள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நிலைமையைத் தாங்கள் சீர் செய்யவே விரும்புவதாக கூறினார். பாகிஸ்தான் படைகள் எப்போதுமே தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியபின், தாமதமாக இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மண்ணில் ஜெய்ஷ்--முகமது அமைப்பு நடத்திய மதரஸாக்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக இந்தியா கூறுவது உண்மையல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் கூறியுள்ளார்.

பர்வேஸ் கட்டாக் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இந்திய ஆளுகையின்கீழ் உள்ள காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் இரு விமானங்கள் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் லேஹ் உள்ளிட்ட விமான நிலையங்கள் பயணிகள் விமானப் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமான நிலையங்கள் வழியாக செல்லும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

கைபர் பகுன்குவா மாநிலத்திலுள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானங்கள், செவ்வாய் காலை நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

"சில விமானங்கள் கீழே விழுந்துள்ளன. இப்போது எதையும் கூற முடியாது. தொழில்நுட்ப குழுவினர் நடந்ததை அனுமானிப்பார்கள். இரு இறந்த உடல்களை கண்டுபிடித்து அவற்றை அப்புறப்படுத்தியுள்ளோம்," என பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஸ்ட காவல் அதிகாரி கூறியுள்ளதாக .என். செய்தி நிறுவனம் கூறுகிறது.

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனெரல் ஆசிஃப் கஃபூர், பாகிஸ்தான் வான் பரப்பில் இரு இந்திய விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு விமானம் பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீருக்குள்ளும் இன்னொரு விமானம் இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரிலும் விழுந்ததாக கூறியுள்ள அவர், ஒரு இந்திய விமானியை தாங்கள் கைது செய்துள்ளதாக கூறியுள்ளார்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருக்கும் பாகிஸ்தான் வான் வெளியில் இருந்து இந்திய நிலைகளை நோக்கி தங்கள் விமானப் படை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறியுள்ளார்.

இது இந்தியா தங்கள் எல்லைக்குள் நுழைந்ததற்கான பதிலடி அல்ல என்று கூறியுள்ள அவர், மனித உயிரிழப்புகள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படாத வகையில் ராணுவ அமைப்புகள் அல்லது இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் தீவிரவாதிகளின் கூடாரங்கள் என்று அவர்கள் கூறும் இடங்களைத் தாக்கினால், இந்திய ஆதரவுடன் பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்கள் மீது பதிலுக்குத் தாக்குதல் நடத்த எங்களுக்கும் உரிமை உண்டு என ஃபைசல் தெரிவித்துள்ளார்.

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் பகுதியில் இருக்கும் இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் ஜெட் போர் விமானங்கள் நுழைந்ததாக சிரேஸ்ட ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த அந்த விமானங்கள், இந்திய வான் பரப்பில் கண்காணிப்புப் பணியில் இருந்த ஜெட் விமானங்களால் திருப்பி அனுப்பப்பட்டன என்று அவர் கூறியுள்ளதாக பி.டி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மூன்று மணிநேரம் மூடப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.