Sunday, June 2, 2019

ஜாதிக ஹெல உறுமய கட்சியினரால் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை


ஜாதிக ஹெல உறுமய கட்சியினரால்
ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள
அவசர கோரிக்கை


மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை இல்லாமல் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது.

இதுதொடர்பாக அதன் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டமும் இதன் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.


இந்த நிலைமை தொடர்ந்தும் நிலவும் வரை பார்த்திருந்தால், கண்டியில் மாத்திரமன்றி, நாடு முழுவதும் உண்ணாவிரதம் என்றும், எதிர்ப்புப் போராட்டங்கள் என்றும் ஆரம்பிக்கப்பட்டு, சமூகத்தில் நிலவும் சமாதான சூழ்நிலை இல்லாமல் போக வழியேற்படும் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுநர்கள் தொடர்பிலும், அமைச்சர் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.







No comments:

Post a Comment