Sunday, June 2, 2019

முஸ்லிம்கள் தனியலகு கோரிக்கையை முன்வைத்திருந்தார்கள் நாம் அதனை ஏற்று கொண்டிருக்கவில்லை கருணா இப்போது இப்படிக் கூறுகின்றார்


முஸ்லிம்கள் தனியலகு கோரிக்கையை
முன்வைத்திருந்தார்கள்
நாம் அதனை ஏற்று கொண்டிருக்கவில்லை
கருணா இப்போது இப்படிக் கூறுகின்றார்


தமிழீழ விடுதலைப் புலிகள் வடகிழக்கு இணைந்த தாயகத்திற்காக ஆயுத போராட்டத்தினை முன்னெடுத்த போது அவர்களிடம் முஸ்லிம் தலைமைகள் தனியலகு கோரிக்கையை முன்வைத்தனர்.
ஆனால் நாம் அதனை ஏற்று கொண்டிருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் வடகிழக்கு இணைந்த தாயகத்திற்காகவே ஆயுத போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தார்கள். வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த விடயத்தை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

கேள்வி - விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் முஸ்லிம் தலைமைகளுக்குமான சந்திப்பின் போது தனியலகு பற்றி பேசப்பட்டதா?

பதில் - முஸ்லிம் தலைமைகள் பேச்சு வார்த்தைகளின் போது தனியலகு கோரிக்கையை முன்வைத்திருந்தார்கள். குறிப்பாக நோர்வே தலைமையிலான பேச்சுக்களின் போது ஹக்கீம் தலைமையிலான பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

ஆனால் நாம் அதனை ஏற்று கொண்டிருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் வடகிழக்கு இணைந்த தாயகத்திற்காகவே ஆயுத போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தார்கள். வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

முஸ்லிம்கள் வர்த்தக நோக்கத்திற்காக கிழக்கில் வந்து களமிறங்கியவர்களாக காணப்படுகின்றார்கள். முதன்முதலாக முஸ்லிம் ஆண்களே கல்முனைக்குடியில் வந்திறங்கினார்கள்.

இவ்வாறு தான் அவர்களின் வரலாறு இருக்கின்றது. அப்படியிருக்கையில், வடகிழக்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகம். தமிழர்களுக்கு தாயகம் கிடைக்கின்ற போது முஸ்லிம்களுடன் பேச்சுகளை நடத்தி தீர்வினை வழங்குவோம் என்ற முடிவுக்கே வந்திருந்தோம்.

ஏனென்றால் தனிநாடு கோரி நாம் போராடிக்கொண்டிருக்கையில், முஸ்லிம்களும் தனியலகைக் கோரி அது கிடைப்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும்.

அதற்காக முஸ்லிம்களை எமது நிர்வாகத்திற்குள் அடக்குவதற்கு நாம் விரும்பவில்லை. ஆனால் முஸ்லிம்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வடக்கும் கிழக்கும் இணைவதை எதிர்ப்பதில் முதலாவது முஸ்லிம் பிரதிநிதி ஹிஸ்புல்லாஹ் ஆவார்.

குறிப்பு:  அரசாங்கம்  முஸ்லிம் மக்களின் விருப்பத்தை பெற்றுக் கொள்ளாமல் தமிழர்களுக்கு வடகிழக்கை இணைத்து தனியான பிரிவு  ஒன்றை வழங்க முன்வந்தால் மாத்திரமே  முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கான  தனியலகைப் பெற வேண்டும் என சிந்தித்தனரே தவிர  வடக்கு, கிழக்கு பிரிந்திருக்கும் நிலையில் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு தனி அலகு பற்றி சிந்திக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment