Saturday, August 3, 2019

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம் எதனையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்

முஸ்லிம் காங்கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
தீர்மானம் எதனையும்
இதுவரையில் மேற்கொள்ளவில்லை




ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் உயர்பீடம் இதுவரையில் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி தொடர்பில், அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்றும் பேச்சுவார்த்தை இடம்பெறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு இன்று திட்டமிடப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் சில சந்தர்ப்பங்களில் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்பீட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நேற்று முன்தினம் வவுனியாவில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது குறிப்பிட்டார்.

எனினும், பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் கட்சியின் பொதுமக்கள் சந்திப்பின் காரணமாக இன்றைய தினம் கூட்டம் இடம்பெறுவது குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னதாக கட்சியின் உயர்பீட கூட்டத்தை நடத்தி, கூட்டணி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment