Monday, September 30, 2019

சர்வதேச ரீதியாக வைரலாகும் இலங்கையர்கள்! பலரின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்


சர்வதேச ரீதியாக வைரலாகும் இலங்கையர்கள்!
பலரின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு மகத்தான அதிதீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
                                                                                                                           
10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு, ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு கொடுக்கும் பாதுகாப்புக்கு சமமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது. இதற்காக இலங்கை அணி வீரர்கள் அழைத்து வரும் போது வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. வீரர்களை சுற்றிவளைத்து பாதுகாப்பாக அழைத்து செல்லும் விதம் பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதன் பின்னர் சர்வதேச நாடுகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் சுற்றுத்தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.




நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் சக்தி எது? அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு



நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும்
போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் சக்தி எது?
அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் பின்னணியில் ராஜபக்ஸர்கள் உள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களை பணயமாக வைத்து தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எவரையும் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் 20 நாட்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்திற்கு பின்னால் இருந்த சக்தி நேற்று வெளியாகியது.

நான் இராணுவத்தினரின் பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்று அவர்களின் கோரிக்கை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன் எனறு கூறி அந்த உண்ணாவிரத்தை முடித்து வைத்தேன்.

நான் சென்று சற்று நேரத்தில் எதிர்தரப்பினரும் அவ்விடத்திற்கு சென்றனர். இந்த நடவடிக்கைக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என இதன் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு வொக்ஷோல் வீதியில் தமது ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தை திறந்து வைத்ததன் பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.






கோத்தாவின் வேட்புமனு நீதிமன்றத்தின் கையில் – வெள்ளியன்று முக்கிய உத்தரவு குடியுரிமை தொடர்பான ஏதேனும் உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டால் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும்.


கோத்தாவின் வேட்புமனு நீதிமன்றத்தின் கையில்
வெள்ளியன்று முக்கிய உத்தரவு
குடியுரிமை தொடர்பான ஏதேனும் உத்தரவுகள்
நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டால்
வேட்புமனுவைத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும்.


கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நாளையும், நாளை மறுநாளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி,   சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டது தொடர்பான முறையான ஆவணங்களை வழங்காமல், இலங்கையின் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை கோத்தாபய ராஜபக்ச பெற்றுக் கொண்டது சட்டவிரோதம் என்றும், அவை செல்லுபடியற்றது எனவும் இந்த மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள வரை, கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடியுரிமை கொண்டவராக அங்கீகரிக்க வேண்டாம் என்று உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த மனு ஒக்ரோபர் 2, 3ஆம் திகதிகளில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோத்தாகொட தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவினால் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டவாளர்களை வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மனுவை விசாரிக்கும் மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவில் யசந்த கோத்தாகொட, அர்ஜூன ஒபேசேகர, மகிந்த சமயவர்த்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இந்த மூன்று பெர் கொண்ட நீதியரசர்கள் குழு அறிவிக்கப்பட்ட போது, அதற்கு கோத்தாபய ராஜபக்சவின் சட்டவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் இந்த மனுவை விசாரிக்கும் குழுவில் இடம்பெறுவதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும், அதனை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோத்தாகொட, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சட்டவாளர்களும் வழக்கை விசாரிக்கும் நீதியரசர்களின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதை உறுதி செய்ய நீதிமன்றம் அசாதாரண நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது என்று கூறினார்.

இந்த விடயத்தின் அரசியல் முக்கியத்துவத்தை தாங்கள் உணர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்றைய விசாரணைகளில் முதல் இரண்டு மனுதாரர்களான குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆகியோர் சமூகமளிக்கவில்லை.

நேற்றுக்காலையும் பின்னர் பிற்பகலிலும் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

பிற்பகல் நடந்த அமர்வின் போது, 2019இல் கோத்தாபய ராஜபக்சவுக்கு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை வழங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களையும்  சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் வஜிர அபேவர்த்தன, உள்நாட்டு விவகார அமைச்சின் செயலாளர் காமின் செனிவிரத்ன,குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் , ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம், 12 மணிவரையும் ஜனாதிபதி வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த நிலையில், கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பான ஏதேனும் உத்தரவுகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டால், வரும் திங்கட்கிழமை அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும்.


சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிவின்றி முடிந்தது எதிர்வரும் 5ஆம் திகதி நடக்கவுள்ள கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்


சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம்
                    முடிவின்றி முடிந்தது          
எதிர்வரும் 5ஆம் திகதி நடக்கவுள்ள
கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்திலேயே
இறுதி முடிவு எடுக்கப்படும்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டு தொடர்பான எந்த முடிவையும் எடுக்காமல், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

இதில், மொட்டு சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. எனினும் இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் தேசிய செயற்கழுவின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

பொதுச் சின்னத்தில் போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

எனினும், இறுதி முடிவு, எதிர்வரும் 5ஆம் திகதி நடக்கவுள்ள கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்திலேயே எடுக்கப்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வைக் கோரி 21ஆவது நாளாக தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்


சம்பள உயர்வைக் கோரி
21ஆவது நாளாக தென்கிழக்கு பல்கலைக்கழக
கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் 21ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பமாகியிருந்தது.

2500 ரூபாய் சம்பள உயர்வு ஏனைய அரசாங்க ஊழியருக்கு வழங்கப்பட்ட போதும் கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்படுவதேன் போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது, தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தலைவர் முஹம்மத் நௌபர் கருத்து தெரிவிக்கையில்,

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடும் அரசியல்வாதிகள் வரவு செலவு திட்டத்தில் தெரிவித்த ஊதிய உயர்வை பெற்றுத்தர தயங்குகின்றனர். ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கிய சம்பள உயர்வை அரசாங்கம் எமக்கு பெற்றுத்தர தர மறுப்பதேன் என்ற கேள்வியை எழுப்பினார்.

நாடாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பல்கலைக்கழக 27 பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எமது தென்கிழக்கு பல்கலைகழகமும் இணைந்து இன்று 21ஆவது தினத்தைக் கடந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுட்டு வருகின்றோம் .

எமது கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்த்து தீர்த்து தரும் வரை எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வேட்பாளர்கள் தொடர்பிலே கவனம் செலுத்துகின்றனர்.

நாட்டில் பல பாகங்களிலும் அரச ஊழியர்களது சம்பள உயர்வு சம்பந்தப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களது பணிபகிஷ்கரிப்பு போராட்டம் சம்பந்தமாக உயர்கல்வி அமைச்சருக்கு தெரியப்படுத்திய போதும் அது தொடர்பில் எதுவித முடிவு எட்டப்படாத நிலை ஏமாற்றத்தை தருவதாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்






மொட்டு சின்னத்தை கைவிட முடியாது – மைத்திரிக்கு மஹிந்த அறிவிப்பு


மொட்டு சின்னத்தை கைவிட முடியாது
மைத்திரிக்கு ஹிந்த அறிவிப்பு


வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னம் மாற்றப்படாது என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
                                                                                                                                         
மொட்டு சின்னத்தை கைவிட்டு பொதுச்சின்னத்தில் போட்டியிட்டால் தான், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மொட்டு சின்னத்தை கைவிட முடியாது என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ச ஏற்கனவே கட்டுப்பணம் செலுத்தி விட்டார் என்றும்,  ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் பொதுச் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச்சு நடத்தலாம் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மொட்டுசின்னத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது – மைத்திரி திட்டவட்டம்


மொட்டுசின்னத்திற்கு 
ஆதரவு அளிக்க முடியாது
மைத்திரி திட்டவட்டம்

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கத் தயார் என்ற போதும், மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு ஆதரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் அளிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
                                                                                                                  
குருநாகலவில் நேற்று நடந்த சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனியாக அல்லாமல், கூட்டணி அமைத்துப் போட்டியிடும்.

கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அதன் ஆதரவாளர்களின் எதிர்காலத்தை இழக்கும் எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி  தயாராக இல்லை.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுச்சின்னத்தில் போட்டியிட பொதுஜன பெரமுன இணங்கினால் தான், அதன் வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடியும்.

மொட்டு சின்னத்துக்கு ஆதரவளிக்க முடியாது என்பதை பொதுஜன பெரமுனவுக்கு தெரிவித்து விட்டோம்.

பல சந்தர்ப்பங்களில் சுதந்திரக் கட்சி பின்னடைவுகளை சந்தித்திருக்கிறது. எனினும் மக்கள் ஆதரவை அது இழந்து விடவில்லை.

இப்போது சுதந்திரக் கட்சி பலவீனமாக உள்ளது. ஆனாலும், அடுத்த ஜனாதிபதி  ஆகப் போகிறவருக்கு சுதந்திரக் கட்சியின் ஆதரவு தேவை. அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கப் போவது சுதந்திரக் கட்சி தான்.

தற்போதைய அரசியலமைப்பின் படி ஜனாதிபதியை விட அடுத்த நாடாளுமன்றத்துக்கே அதிகாரம் இருக்கும்.

எனவே, 2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்தார்.




Sunday, September 29, 2019

மதநல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக ஹிந்து கோவிலை பராமரிக்கும் முஸ்லிம் முதியவர்



மதநல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக

ஹிந்து கோவிலை பராமரிக்கும்
முஸ்லிம் முதியவர்

அசாமில் சிவன் கோவிலை முஸ்லிம் முதியவர் ஒருவர் பராமரித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
                                                                                          
எமது அண்டை நாடான இந்தியாவிலுள்ள அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே பிரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலை, முஸ்லிம் முதியவர், மோதிபர் ரஹ்மான்(73) பராமரித்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கோவிலை சுத்தம் செய்வது முதல், விளக்கு ஏற்றுவது வரை அனைத்து பணிகளையும் அவரே மேற்கொள்கிறார். சிவபெருமானை 'நானா' என அன்புடன் அழைக்கும் அவர், மதநல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் எனக் கூறப்படுகின்றது.

இதுகுறித்து மோதிபர் ரஹ்மான் கூறியிருப்பதாவது:
எனது மூதாதையர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவபெருமான் கேட்டுக் கொண்டதன்படி, பரம்பரை பரம்பரையாக கோவிலை பராமரிக்கும் பணியை செய்து வருகிறோம். சுமார் 500 ஆண்டுகளாக எனது குடும்பத்தார் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். என் 'நானா'(சிவன்) தூய்மையை விரும்புபவர் என்பதால் கோவிலை தூய்மையாக வைத்துக் கொள்வேன். எனக்கு பின் இப்பணியை என்மகன்கள் மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு


இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கத்துக்கு
பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு
  
இந்தோனேசியாவின் சேரம் தீவை தாக்கிய 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
                                                                                                                                
இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சேரம் தீவின் கிழக்கு பகுதியில்  6.5 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் பின்னர், காலை 6.46 மணியளவில் மாலுக்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகவும் 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மீட்பு படை உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.


Add caption





சவூதி மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை!


வூதி மன்னரின் நம்பிக்கைக்குரிய
மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை!

வூதி அரேபியா நாட்டு மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
                                                                                                                                                                                     
வூதி அரேபியா நாட்டு முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்.

அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 23-1-2015 அன்று இறந்தபின்னர் அவரது மகனும் தற்போதைய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜிஸ் சவுத்-தின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை ஜித்தா நகரில் வசிக்கும் நண்பர் ஒருவரை சந்திக்க அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்- நோக்கி அவரது நண்பர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் இச்சம்பவம் பற்றிய தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் கொலையாளியை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். அங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பொலிஸார் காயமடைந்ததாக வூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.