Friday, January 17, 2020

'அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கோமாளி': ஈரான் தலைவர் ஆவேசம்


'அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப்
ஒரு கோமாளி':
ஈரான் தலைவர் ஆவேசம்

'அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப் ஒரு கோமாளி. ஈரான் மக்களை ஆதரிப்பது போல் நம்ப வைத்து, அவர் துரோகம் இழைத்துவிடுவார்' என்று, ஈரான் தலைமை நிர்வாகி அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரானின், குத்ஸ் படைப்பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக் தலைநகர் பாக்தாத் வந்தபோது, அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஈரான், பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில், ஈராக்கில் உள்ள, அமெரிக்க விமான தளங்கள் மீது, ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதே தினத்தில், ஈரானில் இருந்து, ஐரோப்பிய நாடான உக்ரைன் நோக்கி புறப்பட்ட, பயணியர் விமானத்தின் மீது, ஈரான் தவறுதலாக தாக்குதல் நடத்தியது. இதில், 176 அப்பாவி பயணியர், பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து, அமெரிக்கா - ஈரான் இடையே, போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈரானில் நேற்று நடைபெற்ற  ஜும்ஆத் தொழுகையின் போது, அந்நாட்டு தலைமை நிர்வாகி அயதுல்லா அலி கொமேனி, நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில், திறமை வாய்ந்த ஈரான் ராணுவ தளபதியை, கோழைத்தனமாக அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. இதற்கு ஈரான் படையினர் பதிலடி தருகையில், துரதிஷ்டவசமாக, பயணியர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த வருத்தத்துக்குரிய சம்பவம், நமது எதிரிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

தவறுதலாக நடந்த இந்த சம்பவம், நமது தளபதியின் தியாகத்தை மூடி மறைத்துவிட வாய்ப்பளிக்க கூடாது.அமெரிக்கா மீது நமது படைகள் நடத்திய தாக்குதல், அவர்களுக்குள் பேரிடியாக இறங்கியுள்ளது. ஈரானியர்களை தங்கள் காலடியில் விழ செய்ய, மேற்கத்திய நாடுகளால் முடியாது. பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார். ஆனால், அமெரிக்காவுடன் ஒருநாளும் பேச்சு நடத்த முடியாது.ஈரான் மீது அக்கறை இருப்பது போலவும், ஈரானியர்களுக்கு ஆதரவு அளிப்பதைப் போலவும், டிரம்ப் காட்டிக் கொள்கிறார். அவர், ஈரானியர்களை நம்ப வைத்து துரோகம் இழைத்துவிடுவார். டிரம்ப் ஒரு கோமாளி. அவரை நம்பாதீர்கள். இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.

இதற்கிடையே, ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது, கடந்த 8ல், ஈரான் நடத்திய தாக்குதலில், 11 அமெரிக்க படைகள் காயம் அடைந்ததாக, தகவல் வெளியாகி உள்ளது. 'இந்த தாக்குதலில் உயிர் பலி ஏற்படவில்லை. பெரும் அளவிலான பொருட் சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீரர்கள், திடீர் தாக்குதலால், கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, அமெரிக்க தரப்புதெரிவித்துள்ளது.

அமெரிக்கா மீது, ஈரான், 'சைபர் போர்' தொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும், கடந்த காலங்களில், அமெரிக்க இணையவெளியில் ஊடுருவி, பல தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளதை, அமெரிக்க ராணுவ உளவுப்பிரிவின் முன்னாள் அதிகாரி ஜோன் பேட்மேன் உறுதி செய்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 'அமெரிக்க இணைய வெளியில் நுழைந்து, மின்சார துறை, குடிநீர் சேவைகளை தகர்ப்பது; அரசு இணையதளங்களில் உள்ள தகவல்களை அழிப்பது; சமூகவலைதளங்களில், விஷமத்தனமான தகவல்களை பரப்புவது; இணையதளத்தில் 'வைரஸ்' தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில், ஈரான் ஈடுபட வாய்ப்புள்ளது' என்றும் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment