'தலாக் கூறி விவாகரத்து பெறும் முறை தேவையற்றது என

சுப்ரீம் கோர்ட்டில் இந்திய மத்திய அரசு பதில்!



மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறை, ஒரு மதத்தில் தேவையில்லாத நடைமுறையாகும்' என, சுப்ரீம் கோர்ட்டில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, முஸ்லிம் பெண்கள் அமைப்பு சார்பில் இந்திய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
'முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் இந்தப் பிரிவுகளில் கோர்ட் தலையிட முடியாது' என, முஸ்லிம் தனிநபர் வாரியம் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 'தலாக் முறை முஸ்லிம் பெண்களுக்கு எதிரானதா; அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். அதற்கு முன், இது தொடர்பாக, நாடு முழுவதும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக, இந்திய மத்திய அரசு சார்பில், நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை, ஒரு மதத்தில் தேவையில்லாத நடைமுறையாகும். இது பாலின பாகுபாட்டை உருவாக்குவதுடன், பெண்களின் மரியாதைக்கும் எதிரானது. இதில் சமரசம் செய்யக் கூடாது. மேலும் இது அரசியலமைப்பு சட்டத்துக்கும், தனிநபர் உரிமைக்கும் எதிரானது. ஒரு பெண்ணின் உரிமையை, தனித்துவத்துக்கு எதிராக, மத நடவடிக்கைகள் இருக்கக் கூடாது. தலாக், ஒரு மதத்தின் முக்கியமான, தேவையான நடைமுறையாக கருத முடியாது; அதனால், ஒருவருக்கு உள்ள மத உரிமையின் கீழ், தலாக் முறை செல்லாததாகி விடுகிறது. இவ்வாறு மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலாக் முறையை ரத்து செய்யலாமா, பொது சிவில் சட்டம் அமல்படுத்தலாமா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, சட்ட கமிஷன் கூறியுள்ளது. தலாக் முறையை எதிர்க்கும் வழக்கில், 'இது குறித்து பொது விவாதம் நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. இது குறித்து ஆராயும்படி, மத்திய சட்ட கமிஷனுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சட்ட கமிஷன் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான், நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

பொது சிவில் சட்டத்தை கொண்டு வரலாமா, தலாக் முறையை ரத்து செய்யலாமா என்பது குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். மக்களுக்கு சமூக நீதி கிடைக்கும் வகையிலும், குறிப்பாக, பெண்களுக்கு சம உரிமை உள்ள வகையில், பொது சிவில் சட்டத்தை இயற்றலாமா, அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவிக்கலாம். பல்வேறு மதங்களுக்கு உள்ள தனிநபர் சட்டங்களை ரத்து செய்யலாமா, அல்லது அதில் திருத்தம் செய்யலாமா என்பது குறித்தும் மக்கள் கருத்து தெரிவிக்கலாம். தனிநபர் சட்டங்களில், ஒரு குறிப்பிட்ட மதத்தின் சட்டங்கள், கோட்பாடுகள் திணிக்கப்படாது என்று உறுதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top