பெரும்பான்மையை நிரூபிக்கும் அணிக்கு பிரதமர் பதவி
ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு?


நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அணிக்கு பிரதமர் பதவியை வழங்வதற்கு இணங்குவது என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில், ஜனாதிபதி இதனை அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது.

நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை மற்றும் தொடர்ந்தும் சர்வதேசம் கொடுக்கும் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஜனாதிபதி 24 மணி நேரம் கால அவகாசத்தை வழங்கியிருந்ததுடன் அந்த கால அவகாசம் தற்போது முடிவடைந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் நேற்றைய தினம் முழுவதும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஐக்கிய தேசிய முன்னணி உட்பட வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசியில் உரையாடி பேரம் பேசியதுடன் அந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை என கூறப்படுகிறது.

இவ்வாறான நிலைமையில், இன்று மாலை நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் ஒன்றை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பது என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனிடையே ஜனாதிபதி நேற்று அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாகாண முதன்மை செயலாளர்கள் உட்பட அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்த 24 மணி நேரத்தில் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி, அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இனிவரும் காலத்தில் தான் எந்த கட்சியுடனும் சம்பந்தப்படாமல் சுயாதீனமாக செயற்பட போவதாக அரசாங்கத்தின் பணிகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுத்துச் செல்ல அனைத்து அதிகாரிகளின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top