10 வருடம் அனுபவமுள்ள முஸ்லிம் பெண்ணுக்கு
அரச, திணைக்களத்தில் நடந்துவரும் கொடூரம்!
ஏன் இந்த நிலை?


எனது மனைவி சுமார் பத்து வருடங்களாக அரச திணைக்களம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். அங்கு என் மனைவி மாத்திரமே முஸ்லிம்.

ஏனைய அனைவரும் பெரும்பான்மை சகோதரிகள்.எங்கள் வீட்டில் இறைச்சி சமைத்தால் மனைவி அதைக் அலுவலகத்துக்கு கொண்டு செல்ல மாட்டாள். காரணம் அவர்கள் அனைவரும் கொண்டு செல்லும் சாப்பாட்டை பகிர்ந்து உண்ணுவார்கள். அவர்கள் அடிக்கடி நம் வீட்டுக்கும் வந்து செல்பவர்கள்.

பயங்கரவாத தாக்குதலின் பின் ஏறத்தாள சிங்களப் பத்திரிகைகளில் வரும் அனைத்து வதந்திகளையும், இனவாதச் செய்திகளையும் நம்பி என் மனைவியின் முன்னிலையிலேயே முஸ்லிம்களை வெளிப்படையாய் விமர்சிக்கும் அளவுக்குச் சென்று விட்டார்கள்.

மனைவி ஒரு நாள் விடுப்பில் வீட்டிலிருந்தாலும் " இன்று முஸ்லிம்களால் ஏதோ அசம்பாவிதம் நடக்கவிருக்கின்றது, அதனால்தான் அவள் இன்று வரவில்லை" என்று பயப்படும் அளவுக்கு சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்ற வாரம் ஒவ்வொரு பெருநாளிலும் செய்வது போல் அவர்களுக்காக விசேஷமாக பண்டங்கள் கொண்டு சென்றும் யாரும் சாப்பிடவில்லை. திண்பண்டங்களில் ஏதாவது கலந்திருக்கும் என்ற வதந்தியால்தான் பயப்படுகிறார்கள் என்று மனைவி கடையில் கேக் பெட்டி வாங்கி சென்று, அதையும் மறுத்து விட்டார்களாம்.

அன்று மனைவி மிக்க மன உளைச்சலோடு வீடு திரும்பினார்.

அவர்களின் வெறுப்பு உச்ச கட்டத்தை அடைந்து இத்தனை வருடங்களாய் ஒன்றாகப் பகிர்ந்து சாப்பிட்டவர்கள், இப்போது சாப்பாட்டு வேளையில் மனைவியை ஒதுக்கிவிட்டு அவர்கள் மாத்திரம் பகிர்ந்து சாப்பிடுகிறார்களாம்.

இப்போது மனைவி அவரது கல்வித் தகைமையை விடக் குறைந்த வேறு அரச திணைக்கள வேலை ஒன்றுக்கு மாற்றலாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

அங்கும் இதே போன்ற அவலங்கள் தொடரலாம, என் மனைவி போன்று எத்தனையோ முஸ்லிம் பெண்கள் மிகுந்த மன உளைச்சலோடு பணிக்குச் சென்று கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.அல்லாஹ் போதுமானவன்.
M.M.Shiyam

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top