யாழ்ப்பாணத்தில் மாதா சொரூபம் உடைப்பு!


யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் இருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த சொரூபம் இன்று (17) அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலுக்கு வந்த சிலர் சொரூபம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அரியாலை மணியம்தோட்டம் கடற்கரைப் பகுதியில் வேளாங்கன்னி மாதா சொரூபம் அப்பகுதி மக்களினால் வைக்கப்பட்டு, வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நள்ளிரவு வரை அந்த சொரூபம் அழகான தோற்றத்துடன் காட்சியளித்ததாகவும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை வைத்து, மதங்களுக்கிடையேயும் இனங்களுக்கிடையேயும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் நோக்கத்துடன், இந்த சிலை உடைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பல முறை இந்த சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்ச்சியாக இடம்பெறும் இந்த சிலை உடைப்பு சம்பவங்களை கண்டிப்பதுடன், சிலை உடைத்தவர்களை இனங்கண்டு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top