சாய்ந்தமருது விவகாரத்துக்கு மட்டும்
தீர்வு காண அரசும் தயாரில்லை,
நானும் தயாரில்லை!
ஹரீஸ் எம்.பி திட்டவட்டம்


தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் சாய்ந்தமருது விவகாரத்துக்கு மட்டும் தீர்வு காண்பதற்கு அரசாங்கமும் தயாரில்லை நானும் தயாரில்லை என்பதனை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் தற்போது என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. காரணம் இல்லாமல் நான் விமர்சனப் பொருளாக்கப்பட்டுள்ளேன்.

இறுதியாக நடைபெற்ற எமது கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் பேசப்பட்டதாகவும் நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறானது.

குறித்த கூட்டத்தில் சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் பேசப்படவே இல்லை. சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் அங்கு எவரும் பேசவில்லை.

மேலும், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்துக்கு கட்சியின் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கட்சி என்ற அடிப்படையிலும் தனிப்பட்ட வகையில் முழுமையான ஆதரவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக சாய்ந்தமருது பள்ளித் தலைமை தெரிவித்துள்ளதாகவும் ஆனால், நானே அதற்குத் தடையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறெனின், நிஸாம் காரியப்பர் தெரிவித்தவற்றை அவர் எழுத்துமூலமாக முன்வைக்க வேண்டும். வெறும் வாய்ச் சொல்லில் கூறுவதில் அர்த்தமில்லை.
கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்னர் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவோம்என்ற தனதும் மற்றும் முஸ்லிம் காங்கிரஸினதும் சம இணக்கப்பாடான ஒரே தீர்மானத்தை எழுத்துமூலம் உத்தியோகபூர்வமாக நிஸாம் காரியப்பர் அறிவித்தால் என்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறேன். இதனை ஒரு சவாலாக நான் எதிர்கொள்ளவும் நான் தயார்.

இதேவேளை, கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் சாய்ந்தமருது விவகாரத்துக்கு மட்டும் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்வந்தால் அதற்கும் நான் உடன்படுவேன். ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்ய முடியாது என்றால் நானும் அரசின் கருத்துக்கு உடன்பட்டவனாகவே இருப்பேன். அதாவது சாய்ந்தமருதுக்கு மட்டும் முதலில் உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவதற்கு நான் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கமாட்டேன்.

கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்குவது பொருத்தமற்ற செயற்பாடு என்பதனை நான் தெட்டத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top