Thursday, May 31, 2018

தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்று ஆரம்பம்


தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான
விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்று ஆரம்பம்



அடுத்தாண்டு அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
அடுத்த மாதம் 30ம் திகதி வரை விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கலாமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் கமனி பெரேரா தெரிவித்துள்ளார்.
இம்முறை இதில் சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

துறைமுக நகரம் உள்ளடக்கப்பட்ட கொழும்பு நகரின் புதிய வரைபடம் வெளியானது


துறைமுக நகரம் உள்ளடக்கப்பட்ட
கொழும்பு நகரின் புதிய வரைபடம் வெளியானது

கொழும்பு நகரின் புதிய வரைபடம் நேற்று நிலஅளவைத் திணைக்களத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வரைபடத்தில்கொழும்பு துறைமுக நகரம், அதிவேக நெடுஞ்சாலைகள், கொழும்பு நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, நில அளவையாளர் நாயகம் உதயகாந்த தெரிவித்துள்ளார்.
புதிய வரைபடத்தின்படி, கொழும்பு நகரின் பரப்பளவு, 474.5 ஹெக்ரெயரினால் அதிகரித்துள்ளது.
இலங்கையின் புதிய வரைபடத்தை தயாரிக்கும் பணி, 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
மொத்தம், 92 பகுதிகளாக இந்த வரைபடம் தயாரிக்கப்படுகிறது. இதில், 72 பகுதிகளை வரையும் பணிகள் முடிந்து விட்டன.
எஞ்சிய பகுதிகள் நிறைவு செய்யப்பட்டு, இந்த அண்டு இறுதிக்குள், இலங்கையின் முழுமையான வரைபடம் வெளியிடப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் கல்முனைப் பிரதேச பக்தர்கள்



மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில்

கல்முனைப் பிரதேச பக்தர்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை, சாய்ந்தமருது பிரதேச நோன்பாளிகளும் கல்ந்து கொண்டதாக அறிவிக்கப்படுகின்றது.
இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோர் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
 







மஹிந்தவின் இப்தார் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு


மஹிந்தவின் இப்தார்
முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது.
வருடாந்தம் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோர் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
அதேவேளை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி, ஈரான், பலஸ்தீன் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், முஸ்லிம் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் இன்றைய தினம் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

















2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது


2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது

   


தெரிவுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த பரிசை அறிவிக்கும் ஸ்வீடிஷ் அகாடமியின் தெரிவுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்தது.
இதன் காரணமாக இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நோபல் பரிசு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இலக்கிய படைப்புகளுக்கான நோபல் பரிசு தேர்வுக்குழுவிலிருந்த உறுப்பினர்கள் பலர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினர்.
இந்நிலையில், 2018-ம் ஆண்டு மட்டுமின்றி 2019-ம் ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளா நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன், "தெரிவுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவது சாத்தியமில்லை", என்று தெரிவித்துள்ளார்.


தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான விண்ணப்பம் வெளியீடு


தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது
தொடர்பிலான விண்ணப்பம் வெளியீடு



அடுத்த வருடத்துக்கு, தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பபப்படிவம் என்பன கல்வியமைச்சால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது அவற்றை http://www.moe.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

ரூபா 6 கோடி 75 இலட்சம் பெறுமதியான 10 கிலோ தங்கத்துடன் போலந்து நாட்டவர் கைது


ரூபா 6 கோடி 75 இலட்சம் பெறுமதியான
10 கிலோ தங்கத்துடன் போலந்து நாட்டவர் கைது


பத்து கிலோ கிராம் எடைகொண்ட ரூபா 6 கோடி 75 இலட்சம் பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் டுபாயிலிருந்து வந்த போலந்து நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (31) காலை டுபாயிலிருந்து பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்திற்கு வந்த EK 650 எனும் விமானத்தில் வந்திறங்கிய குறித்த பயணியிடமிருந்து 100 கிராம் நிறை கொண்ட 100 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டதாக சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
60 வயதான சந்தேகநபர், குறித்த தங்க பிஸ்கட்டுகளை, சந்தேகநபர் தனது வயிற்றில் அணிந்திருந்த பட்டியில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


                                                                                                                                                                     


2018.05.30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் அமைச்சரவை தீர்மானங்கள்


2018.05.30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில்
மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்
அமைச்சரவை தீர்மானங்கள்




01. இலங்கையில் '1990 சுவசெரிய திட்டம்' - இரண்டாம் கட்டத்தினை செயற்படுத்துதல் (விடய இல. 10)
இலங்கையில் '1990 சுவசெரிய திட்டம்' - இரண்டாம் கட்டத்தினை நாடு முழுவதும் செயற்படுத்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்காக 15.02 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுத் தருவதற்கு இந்தியா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 1990 சுவசெரிய மன்றத்தினை ஆரம்பிக்கும் வரை அவ் அம்பூலன்ஸ் சேவையின் இரண்டாம் கட்டத்தினை செயற்படுத்துவதற்கு உரிய வரிச் செலவுகளை தமது அமைச்சினால் பொறுப்பெடுப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. நடுத்தர வருமானம் பெறுகின்ற வீட்டு கடன் யோசனை திட்டம் தொடர்பில் 2018ம் ஆண்டின் யோசனைகளை செயற்படுத்துதல் (விடய இல. 12)
முதல் தடவையாக வீடொன்றினை கொள்வனவு செய்கின்ற நடுத்தர வருமானம் பெறுகவோருக்கு தனியார் பிரிவினரால் செயற்படுத்தப்படுகின்ற வீடமைப்பு வேலைத்திட்டங்களில் இருந்தும் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் நடுத்தர வருமானம் பெறுகின்ற வீட்டு கடன் யோசனை திட்டத்தினை விரிவுபடுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில்களுக்கான யப்பான் நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 13)
அரச பிரிவின் நிறைவேற்று அதிகாரிகளுக்காக யப்பானின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகமொன்றில் முதுமானி பட்டப்படிப்பினை தொடர்வதற்காக 2010 ஆண்டில் மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில்களுக்கான யப்பான் நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திட்டத்தின் ஊடாக இதுவரை 135 அதிகாரிகள் தமது மேற்படிப்பினை பூர்த்தி செய்துள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க இந்நிகழ்ச்சி திட்டத்தினை அடுத்து வருகின்ற 04 வருடங்களிலும் முன்னெடுத்துச் செல்வதற்கு யப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அடுத்து வருகின்ற ஒவ்வொரு வருடத்திலும் முதுமானி பட்டப்படிப்பிற்கான புலமை பரிசில்கள் நான்கும், கலாநிதி பட்டப்படிப்பிற்கான புலமைப்பரிசில்கள் இரண்டும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த நிகழ்ச்சித்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு தேவையான 265 மில்லியன் யப்பான் யென் தொகை நன்கொடையினை பெற்றுக் கொள்வதற்காக யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. கலமெடிய மீன்பிடி துறைமுக நிர்மாணிப்பின் மூலம் பாதிக்கப்படுகின்ற செய்ன் மீனவர்களுக்கு சலுகையளித்தல் (விடய இல. 15)
 கலமெடிய மீன்பிடி துறைமுக நிர்மாணிப்பின் மூலம் அப்பிரதேசத்திலுள்ள 28 செய்ன் மீனவர்களும் அவர்களிடத்தில் தங்கி வாழ்கின்ற 644 பேரும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் குறித்த மீனவர்களின் வருடாந்த வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியினை காணலாம். அதற்காக அவர்களுக்கு பணத்தினால் நட்ட ஈட்டினை வழங்குவதற்கு பதிலாக 7.8 மில்லியன் ரூபா மதிப்பிடத்தக்க 36 அடி நீளமான பல நாள் படகு இயந்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள 28 மீனவர்களுக்கும் வௌ;வேறாக குறித்த படகுகளை பெற்றுக் கொடுப்பதற்கும், அம்மீன்பிடி படகுகளுக்கான செலவில் 50 சதவீதத்தினை அரசாங்கத்தின் மூலம் மேற்கொள்வதற்குமாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. வியாபார நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக ஒரு சேவை கவுன்டரின் ஊடாக சேவை வசதிகளை செயற்படுத்துவதற்கு முடியுமான வகையில் சுங்க கட்டளை சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 17)
வியாபார நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக ஒரு சேவை கவுன்டரின் ஊடாக சேவை வசதிகளை செயற்படு;;த்துவதற்கு முடியுமான வகையில் சுங்க கட்டளை சட்டத்தினை திருத்தம் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுங்க கட்டளைகள் சட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டிய முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி சட்டமூலம் ஒன்றினை வரைவதற்காக சட்டமாதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. இலங்கையில் துறைமுகங்கள் உட்பட கரையோர வலயங்களினுள் கழிவு முகாமைத்துவம் (விடய இல.23)
இலங்கையில் துறைமுகங்கள் உட்பட கரையோர வலயங்களினுள் கழிவு முகாமைத்துவம் செய்வதற்காக கழிவு முகாமைத்துவத்துடன் தொடர்புபட்ட அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் கரையோர வலய கழிவு முகாமைத்துவ குழுவொன்றினை நியமிப்பதற்கும், கடற்கரையினை அசுத்தப்படுத்துகின்ற நபர்களுக்கு எதிராக டெங்கு ஒழிப்பு சட்டம், தேசிய சூழலியல் சட்டம் மற்றும் சமுத்திர சுற்றாடல் மோசடிகளை தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் உறுப்புரைகளை கடுமையான முறையில் செயற்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் முன்னாள் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. பொதுமக்களுக்கு துரிதகதியில் காணி உரித்துகளை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டம் (விடய இல. 25)
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பொதுமக்களுக்கு துரிதகதியில் காணி உரித்துகளை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, மொனராகலை, காலி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு காணி உரித்துகளை பெற்றுக் கொடுக்கும் பிரதான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. எஞ்சிய 21 மாவட்டங்களுக்குமான பிரதான நிகழ்வுகளையும், ஒரு மாவட்டத்தில் 03 எனும் விதத்தில் பிராந்திய நிகழ்வுகளையும் 2018ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பிரினுள் ஒழுங்கு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் மற்றும் பிரதேச மட்டத்தில் அந்நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதற்காக காணி ஆணையாளர் நாயக திணைக்களத்துக்கு மேலதிக திறைசேரி நிதியினை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 08. பெருந்தோட்ட பிரதேசங்களுக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையொன்றினை ஸ்தாபித்தல் (விடய இல. 27)
பெருந்தோட்ட பிரதேசங்களுக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையொன்றினை ஸ்தாபிப்பதற்கு அவசியமான அவகாசங்களை வழங்கி தயாரிக்கப்பட்டுள்ள, பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்ட மூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பிரஜைகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ யு. பழனி திகாம்பரம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. புகையிரத குறுக்கு வீதி பாதுகாப்பு பிரிவினை பெற்றுக் கொடுத்தல், பொறுத்துதல், பரிட்சித்து பார்த்தல் மற்றும் கொண்டு நடாத்துதல் ஆகியவற்றுக்கான கொள்முதல் நடவடிக்கைகள் (விடய இல. 34)
இரட்டை புகையிரத குறுக்கு வீதிகளுக்காக பாதுகாப்பு பிரிவுகள் 25 இனையும், ஒற்றை புகையிரத குறுக்கு வீதிகளுக்காக பாதுகாப்பு பிரிவுக்ள 175 இனையும் பெற்றுக் கொடுத்தல், பொறுத்துதல், பரிட்சித்து பார்த்தல் மற்றும் கொண்டு நடாத்துதல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்தினை உரிய பயிற்சியினையும் வழங்கும் அடிப்படையில் M/s N-Able (Pvt) Ltd. M/s மற்றும் Uni Consultancy Services  ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கூட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்தும் போது ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளையும் கவனத்திற் கொண்டு அவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் கால எல்லையினை 12 மாதங்களினால் நீடிப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. தடயவியல் கணக்காய்வுஃ பரிசீலனைகளை நடாத்துவதற்காக சர்வதேச கணக்காய்வு கம்பனி அல்லது கம்பனிகளின் சேவையினை கொள்முதல் செய்தல் (விடய இல. 35)
மத்திய வங்கி திறைசேரி முறைக்கேடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட இறுதி அறிக்கையின் அடிப்படையில், அங்கு குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட தடயவியல் கணக்காய்வினை மேற்கொள்வதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த கணக்காய்வினை மேற்கொள்வதற்கு உகந்த நிறுவனமொன்றினை தெரிவு செய்வதற்காக ஆலோசனை கொள்முதல் குழுவொன்றினை நியமிப்பது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. கிராமிய பாலங்கள் வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இனந்தெரியாத செலவுகளின் மிகுதியினை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துதல் (விடய இல. 38)
கிராமிய பாலங்கள் வேலைத்திட்டங்களின் கீழ் மாகாண மட்டத்தில் தற்காலிக பாலங்கள் 09 இற்கு பகரமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அவசியமான இடங்களை தெரிவு செய்து 15 மேலதிக பாலங்களை நிர்மாணிப்பது பொருத்தம் என தேசிய செயற்பாட்டு குழு கூட்டத்தின் போது யோசனையொன்று முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாகாண மட்டத்தில் தற்காலிக பாலங்கள் 09 இற்கு பகரமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அவசியமான இடங்களை தெரிவு செய்து வானே கம்பிகளினால் ஆன 15 மேலதிக பாலங்களை நிர்மாணிப்பது தொடர்பில் மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. வேலையற்ற பட்டதாரிகளை கட்டம் கட்டமாக பயிற்றுவித்தல் (விடய இல. 40)
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலையினை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு 45 வருடத்திற்கு உட்பட்ட விண்ணப்பித்த அனைவருக்கும் வேலையினை பெற்றுக் கொடுப்பதற்காக நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018ம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் அவர்களுக்கு 20,000 கொடுப்பனவினை மாதாந்தம் வழங்குவதற்கும் தீரர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனையோர் 2019 ஆண்டில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். அதனடிப்படையில், குறித்த பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்;கும், பின்னர் தகைமை பெறுகின்ற பட்டதாரிகளை அபிவிருத்தி அதிகாரிகள் யாப்பின் கீழ் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. அழிந்து செல்லும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள மிருக மற்றும் பயிரினங்கள் தொடர்பில் சர்வதேச வியாபாரம் தொடர்பான ஒப்பந்தத்தின் (CITES) பங்குதாரர்களின் 18 ஆவது சர்வதேச மாநாட்டிற்கு தலைமை தாங்குதல் (விடய இல. 41)
ஆழிந்து செல்லும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள மிருக மற்றும் பயிரினங்கள் தொடர்பில் சர்வதேச வியாபாரம் தொடர்பான ஒப்பந்தத்தின் (CITES) பங்குதாரர்களின் 18 ஆவது சர்வதேச மாநாட்டினை 2019ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியிலிருந்து ஜுன் மாதம் 03ம் திகதி வரை இலங்கை நடாத்துவதற்காக தலைமைத்துவத்தினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. குறித்த மாநாட்டினை கொண்டு நடாத்துவதற்கு முன்னால் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த போதும், 2018-03-28ம் திகதிய 2064/26ம் இலக்க வர்த்தமானியின் பிரகாரம் அப்பொறுப்பு புத்தசாசன அமைச்சுக்கு வழங்கப்பட்டது. அதனடிப்படையில், குறித்த மாநாட்டினை இலங்கையில் நடாத்துவதற்காக அழிந்து செல்லும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள மிருக மற்றும் பயிரினங்கள் தொடர்பில் சர்வதேச வியாபாரம் தொடர்பான ஒப்பந்தத்தின் (CITES) செயலகத்துடன் ஏற்படுத்திக் கொள்ள உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில் கைச்சாத்திடுவது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பேரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. தென் மாகாணத்தில் பரவி வருகின்ற இன்புலுவன்ஸா நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான துரித நடவடிக்கைகளை எடுத்தல் (விடய இல. 44)
தென் மாகாணத்தில் பரவி வருகின்ற இன்புலுவன்ஸா நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான துரித நடவடிக்கைகளை சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு எடுத்து வருகின்றது. இந்நோயினை அம் மாகாணத்தினுள் மற்றும் ஏனைய அருகிலுள்ள பிரதேசங்களுக்கும் பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவசியமான மேலதிக மருத்துவ உபகரணங்கள், ஏனைய உபகரணங்கள் மற்றும் வசதிகளை தாமதிக்காது வழங்குவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பெயரில் வேலை பார்க்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ பைசல் காசிம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. அரசாங்கத்தின் உர மானியத்தின் கீழ் பகிர்ந்தளிப்பதற்காக உரத்தினை கொள்முதல் செய்தல் - 2018 ஜுன் (விடய இல. 45)
அரசாங்கத்தின் உர மானியத்தின் கீழ் உரத்தினை பகிர்ந்தளிக்கும் திட்டத்தின் கீழ் 2018ம் ஆண்டு ஜுன் மாதத்தில் பகிர்ந்தளிப்பதற்கு அவசியமான 6,000 மெட்ரிக் தொன் மியுரியேட் ஒப் பொடெஸ் வகை உரத்தினை ஒரு மெட்ரிக் தொன் 311.74 அமெரிக்க டொலர்கள் வீதம், சிங்கப்பூரின் M/s Velency International Trading (Pvt) Ltd. நிர்வனத்திடம் இருந்தும், 18,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை ஒரு மெட்ரிக் தொன் 280.90 அமெரிக்க டொலர்கள் வீதம், அபூதாபியின்; M/s Agri Commodities and Finance FZE நிர்வனத்திடம் இருந்தும் கொள்முதல் மேன்முறையீட்டு சபையின் சிபார்சின் பெயரில் கொள்வனவு செய்வது தொடர்பில் விவசாயத் துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.