Sunday, September 30, 2018

போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்


போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கு
உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்



போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 28 (கடந்த வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிவிப்பு தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அவ்விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், உற்பத்தியாளர், இறக்குமதியாளர், பொதி செய்பவர், விநியோகஸ்தர், வியாபாரி உள்ளிட்ட எவரும்  உள்நாட்டில் பொதி செய்யப்பட்டு, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான உச்சபட்ச சில்லறை விலைக்கு மேலாக விற்பனை செய்யவோ, விற்பனைக்கு விடவோ, விறபனைக்கு வெளிப்படுத்தவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என பாவனையாளர் அதிகார சபை கட்டளையிட்டுள்ளது.

போத்தலின் அளவு   உச்சபட்ச சில்லறை விலை

350-499 மி.லீற்றர் - ரூபா 26
500-749 மி.லீற்றர் - ரூபா 35
1-1.49 லீற்றர் - ரூபா 50
1.5-4.99 லீற்றர் - ரூபா 70
5-6.99 லீற்றர் - ரூபா 150
7 லீற்றர் - ரூபா 170

திடீரென உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர்


திடீரென உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர்

பிரபல சிங்கள நகைச்சுவை நடிகரும் பாடகருமான ரொனி லீச் திடீரென மரணமடைந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 65.
அவுஸ்திரேலியாவுக்கு கலைப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிமை சென்றிருந்தார்.
இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியின் பின்னர் அவர் இன்று மாலை நாடு திரும்ப திட்டமிட்டிருந்தார். எனினும் எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் பிரபல நகைச்சுவை நடிகராக ரொனி லீச் திகழ்கிறார். இவர் பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடங்களில் நடித்துள்ளார்.
புகழ் பூத்த பல்வேறு சிங்கள பொப்பிசை பாடல்களை ரொனி லீச் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




உலக சிறுவர் முதியோர் தினம் இன்று.


உலக சிறுவர் முதியோர் தினம் இன்று.




உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்றாகும். 1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 1989ம் ஆண்டு நவம்பர் 29ம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் நிறைவேற்றப்பட்டது. அந்த சாசனத்திற்கமைய, சட்டத்தின் மூலம் குறைந்த வயதில் முழுமையடைந்தாலேயொழிய 18 வயதிற்கு உட்பட்ட அனைத்துப் பிரஜைகளும் சிறுவர்களாகக் கருதப்படுவார்கள்.

இதேவேளை, உலக வயோதிபர் தினமும் இன்றாகும். 1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டளவில் உலகில் 1200 கோடி மக்கள் வயோதிபர்களாக இருப்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாம் அனுபவிக்கும் பல உரிமைகளை எமக்கு பெற்றுத் தந்த வயோதிபர்களை கௌரவத்துடன் நன்றி கூற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.



இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு


இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு
 நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை
832 ஆக உயர்வு
   
இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
இதனிடையே நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது. பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதியை தாக்கியது. இதனால் அந்நகரமே மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் பலர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாதிப்புகள் அதிகள் இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.







ஐ.நா. சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30) அதிகாலை நாடு திரும்பினார்


ஐ.நா. சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இன்று (30) அதிகாலை நாடு திரும்பினார்



ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30) அதிகாலை நாடு திரும்பினார்
கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி இலங்கையிலிருந்து சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவினர், கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற அதன் பிரதான கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர்.
அத்துடன் செப்டெம்பர் 24 இல் இடம்பெற்ற, நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டிலும், உலக போதைப்பொருள் பிரச்சினை தொடர்பான  பூகோள நடவடிக்கைகளுக்கான விசேட சந்திப்பிலும் ஜனாதிபதி பங்குபற்றினார்.
செப்டெம்பர் 25 இல் இடம்பெற்ற அதன் பிரதான கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய செயற்றிட்டங்கள் தொடர்பில் விளக்கினார்.
இதன்போது பல்வேறு அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கிற்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ஸ


கிழக்கிற்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ஸ

மீண்டும் கிழக்கிற்கு வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. மாமாங்கேஸ்வரர் ஆலய ஆசிர்வாதம் பெறுவதற்கு சந்தர்ப்பமும் ஒன்றும் கிட்டியது. அத்துடன் உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தற்போதைய தேவைகளையும் அறிந்துகொண்டோம்.

கைத்தறி நெசவு,கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளுக்கு பிரபலமான அம்பாறை மாவட்டம் கல்முனை,மருதமுனை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டமையை நான் கௌரவமாக கருதுகிறேன்.மேலும் குறித்த பிரதேசத்தின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை மேம்பாடு தொடர்பில் அப்பிரதேச வாலிபர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது.குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட நகரபிதா ரக்கீப் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ..இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.






Saturday, September 29, 2018

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் இல்லை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு


இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் இல்லை
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

இலங்கைக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கைகளும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுனாமி ஆபத்துக்கள் உள்ளதாக பரவும் கட்டுக்கதைகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடல் பிரதேசத்தில் வாழும் மக்கள் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுனாமி ஆபத்துக்கள் ஏற்படுமா என்பது தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 380 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இலங்கை மக்களின் வாகன கனவில் விழுந்த பேரிடி!



இலங்கை மக்களின் வாகன கனவில் விழுந்த பேரிடி!



இலங்கை மக்களின் வாகன கனவினை நனவாக்கி கொள்ள முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களை விடவும் வாகனங்களின் விலை மிகவும் வேகமான முறையில் அதிகரித்து வருகின்றது.
இதற்கு முன்னர் தீர்வை வரி உட்பட பல வரிகள் காரணமாக வாகனங்களில் விலைகளில் அதிரிப்பு நிலை ஏற்பட்டது. தற்போது ரூபாயின் வீழ்ச்சி காரணமாக வாகனங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய மீண்டும் 3 முதல் 8 லட்சம் ரூபா வரையில் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளது.
டொலருக்காக செலுத்தப்படும் ரூபாவின் தொகை அதிகரிக்கப்படுகின்றமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய டொயோட்டா எக்சியோ வாகனம் ஒன்று 8 லட்சம் ரூபாயில் அதிகரித்துள்ள நிலையில் சுசுகி வெகன் ஆர் வாகனம் 3 லட்சம் ரூபாயில் அதிகரித்துள்ளது. அதற்கு சமமாக ஏனைய வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஈராக்கில் மாடல் அழகியை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்


ஈராக்கில் மாடல் அழகியை 
சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்

ஈராக்கின் பிரபல மாடல் அழகியை பாக்தாத்தில் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொலைக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இவரது ஸ்டைலான வாழ்க்கை முறை தீவிரவாதிகளுக்கு பிடிக்க வில்லை. கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.
இவரது சொந்த ஊர் பாக்தாத். ஆனால் அங்கு வசிக்காமல் குர்திஸ்தானில் தங்கியிருந்தார். எப்போதாவது தான் பாக்தாத் செல்வார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்தாத் சென்று இருந்தார்.
அப்போது அவரை சில தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். அதில் 3 குண்டுகள் அவரது உடலில் பாய்ந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இவரது கொலைக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவற்றை பதிவு செய்துள்ளனர்.




இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு


இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம்,
சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு

இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியை நேற்று தாக்கிய நிலநடுக்கம், சுனாமி பேரலைகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமி பேரலையில் சிக்கி இடிந்து விழுந்தன. ஏராளமானோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.






Friday, September 28, 2018

ஆசிய கிண்ண இறுதிப் போட்டி - வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’



 

 ஆசிய கிண்ண இறுதிப் போட்டி
- வங்காளதேசத்தை வீழ்த்தி
7 வது முறையாக இந்தியாசாம்பியன்
  
ஆசிய கிண்ண  இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ஓட்டம் குவித்தார்.
வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ஓட்டங்கள் குவித்தது. 17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ஓட்டங்களைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ஓட்டங்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ஓட்டங்கள் குவித்தது.
அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ஓட்டங்கள், முஷ்பிகுர் ரஹிம் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்.
இதனால் 39 ஓட்டங்களுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். மெஹ்முதுல்லா 4 ஓட்டங்களிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ஓட்டங்களிலும் வெளியேறினார்கள்.
சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ஓட்டங்கள் எடுக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ஓட்டங்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ஓட்டங்கள் எடுத்திருந்த தவான், நஸ்முல் இஸ்லாம் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ஓட்டங்களில் மோர்டாசா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ரூபல் ஹூசைன் பந்தில் நஸ்முல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உட்பட 48 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய தோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார். வங்காளதேச வீரர்களின் பந்துகளை பொறுப்பான முறையில் எதிர்கொண்ட இவர்கள் அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆனால், மகமதுல்லா வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 37 ஓட்டங்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தோனி - தினேஷ் கார்த்திக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் குவித்தது. கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ஓட்டங்களில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்தில் தோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில்  பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார்.
இதனால், 169 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ஓட்ட ரேட் விகிதம் குறைந்து ஆட்டத்தில் வங்காளதேச அணியின் கை ஓங்கியது.
இருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்த பதட்டம் தனிந்து வெற்றியை நோக்கி இந்தியா பயணித்தது.
ஆனால் வெற்றிக்கு 11 ஓட்டங்களே தேவை என்ற நிலையில் 23 ஓட்டங்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.
இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ஓட்டங்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கேதர் ஜாதவ் 23 ஓட்டங்களுடனும், குல்தீப் யாதவ் 5 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ஓட்டங்கள், தினேஷ் கார்த்திக் 37 ஓட்டங்கள், தோனி 36 ஓட்டங்கள் குவித்தனர். வங்காளதேச அணியில் முஸ்தாபிசூர் மற்றும் மோர்டாசா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.