Friday, June 30, 2017

455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெரியமடு மகிளங்குளம் - பள்ளமடு பாதை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோரால் திறந்து வைப்பு



அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 11.4 கிலோ மீற்றர் நீளமான பெரியமடு மகிளங்குளம் - பள்ளமடு பாதையை இன்று 1 ஆம் திகதி சனிக்கிழமை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.


இந்த நிகழ்வில் மாகாண அமைச்சின் செயலாளர், மாகாண போக்குவரத்து ஆணையாளர், மற்றும் உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன், அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முஹம்மது, செல்லத்தம்பு, பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.








மடுவை முன்னேற்ற வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் நமக்கு உள்ளது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்


யுத்தத்தின் வடுக்களால் மோசமாக பாதிக்கப்பட்டு தலைதூக்க முடியாத பிரதேசமாகவுள்ள மடுவை முன்னேற்ற வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் நமக்கு உள்ளது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் - மடு பிரதேசத்தில் அமைந்திருக்கும் கீரி சுட்டான் கிராமத்தில் பல்வேறு தேவைகளை இனங்கண்டு தீர்த்து வைப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்று கீரி சுட்டான் கிராமத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக, மடு பிரதேசத்திலே யுத்தம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை நாம் அறிவோம். இதனால் மடுவின் கல்வி வளர்ச்சி பின்னடைந்தது.
கடந்த காலங்களில் வடமாகாண முன்னாள் ஆளுநரின் உதவியுடன் இந்தப் பிரதேசத்திற்கு யாழிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து கல்வியை ஊக்கப்படுத்தினோம்.
அரச அதிகாரிகளும், அலுவலர்களும், ஆசிரியர்களும் இந்தப் பகுதியில் பணி புரிவதற்கு தயக்கம் காட்டிய ஒருகாலம் இருந்தது. அந்த நிலை இப்போது மாறிவருவது மகிழ்ச்சி தருகின்றது. மடு பிரதேச கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் காண்கின்றோம்.
இந்த கிராமத்தின் வைத்திய வசதி கருதி ஆரம்ப மருத்துவப் பிரிவொன்றை அமைத்து தரும் வகையில் 2018ஆம் ஆண்டிற்குள் அந்த திட்டத்தை உள்வாங்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளரை கோரியுள்ளேன் என ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மடு பங்குத்தந்தை மதன்ராஜ், உதவிஅரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் தடயங்களை மறைத்த டாக்டரின் பட்டம் பறிப்பு – இலங்கை வைத்திய சபை (SLMC) தீர்மானம்


பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் எலும்புகள் காணாமல் போனமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளில் கொழும்பு முன்னாள் உயர் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளியாவார் என இலங்கை வைத்திய சபை தீர்மானம் எடுத்துள்ளது.
இதன்படி, அவரின் மருத்துவ சான்றிதழ் 6 மாத காலத்துக்கு தடை செய்யப்படுவதாகவும் இலங்கை மருத்துவ சபை தீர்மானித்துள்ளது.

வைத்திய சபை மேற்கொண்ட  நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதியின் புதிய செயலாளர் ?


ஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனேண்டோ நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளராக மூன்று தினங்களுக்குள் தனக்கு நியமனம் கிடைக்கும் என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவர் அரச நிருவாக சேவை அதிகாரியாவர். இவர் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
நேற்று இராஜினாமா செய்த ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபேகோனின் இடத்துக்கே இவர் நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகரும் கடந்த 28 ஆம் திகதி முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளருக்குப் பதிலாக, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் சவூதி தொழிலதிபர்: வைரலாகும் புகைப்படம்


அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி ரிகானாவும், சவூதி தொழில் அதிபதிரான ஹஸன் ஜமீலும் நீச்சல் குளம் ஒன்றில் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் Rihanna(29). பிரபல பாடகியான இவர் சவூதி அரேபியாவின் தொழிலதிபரான Hassan Jameel-ம் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் Hassan Jameel-Rihanna-வுடன் நீச்சல் குளம் ஒன்றில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டிராகிராமி பதிவேற்றம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி இருவரும் முத்தம் கொடுக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இது சமூகவலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Hassan Jameel உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அப்துல் லதீப் ஜமீல் நிறுவனத்தின் துணை தலைவராக உள்ளார் என்றும் சவூதி அரேபியாவில் டொயோட்டோ கார்களை விநியோகிக்கும் உரிமையும் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.







மருத்துவமனையில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச் சூடு: பலர் படுகாயம்


அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் சரமாரி துப்பாச்சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் New York-ல் இன்று உள்ளூர் நேரப்படி 2.45 மணி அளவில் Bronx-Lebanon மருத்துவமனையில் மர்ம ஒருவர் அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.
இதில் மூன்று மருத்துவர்கள் உட்பட பலர் காயமடைந்திருப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பின் மருத்துவமனையில் உள்ள 16-வது மாடியில் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.
இதில் மருத்துவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கையில், Bronx-Lebanon மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அம்மருத்துவனையின் முன்னாள் மருத்துவர் என்றும் அவரது பெயர் Henry Bello(35) என்றும் தெரிவித்துள்ளது.
இவர் மருத்துவமனையில் மருத்துவர் வேடமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் என்றும், அவர் கருப்பு மற்றும் புளூ நிற உடை அணிந்ந்து, வெளிப்புறத்தில் வெள்ளை நிற கோட் அணிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

Bronx-Lebanon மருத்துவமனை 120-ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் 1000-க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்ட நோயாளி அறைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








இரத்தினபுரி மாவட்டத்தின் சுற்றாடல் பாதிப்புக்களை தடுப்பதற்கான தமது கடமைகளை அனைவரும் நிறைவேற்ற வேண்டும்…. ஜனாதிபதி


இரத்தினபுரி மாவட்டம் தற்போது காணப்படும் நிலையை மேலும் 25 வருடங்களுக்கு அப்பாலும் பேண வேண்டுமாயின் அங்கு நடைபெறும் சுற்றாடல் பாதிப்புக்களை உடனடியாக தடுக்கவேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
இரத்தினக்கல் கைத்தொழிலை மேம்படுத்தல் அவசியமானது என்றபோதிலும், தமது எதிர்கால சந்ததிகளும் இப்பிரதேசத்தில் வாழும் உரிமையை உறுதி செய்து அங்கு நடைபெறும் சுற்றாடல் பாதிப்புக்களை தடுப்பதற்கான தமது பொறுப்புக்களை வர்த்தக சமூகத்தினரைப் போன்றே ஏனையோரும் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இரத்தினபுரி மாகாணத்தின் பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் பலவற்றையும் திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று (30) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு மற்றும் வௌளப்பெருக்கு நிலைமைகள் தொடர்பாக தேசிய கட்டிடங்கள் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களுள் அனுமதியற்ற முறையில் மேற்கொள்ளப்படும் இரத்தினக்கல் அகழ்வு காரணமாக ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புக்களே முதன்மையான காரணமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் ஏற்படும் சில நிகழ்வுகள் தற்போது ஆட்சிபுரிபவர்களின் கிரக பலன்கள் காரணமாகவே ஏற்படுகின்றதென ஒரு சிலர் தெரிவிப்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களினால் பூகோள வெப்பமடைதல் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை இன்று உலக நாடுகள் அனைத்துமே எதிர்நோக்க நேர்ந்துள்ளதுடன், சுற்றாடல் சவால்களை எம்மால் தடுக்க முடியாது என்பதுடன் இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாகாணத்தின் பொது மருத்துவமனையில் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறுவர் வாட்டுத் தொகுதி, இரத்த வங்கி, குருதி சுத்திகரிப்புப் பிரிவு, மற்றும் X கதிர் பிரிவு என்பன ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.
பிரதேச நன்கொடையாளர்கள் மற்றும் அமெரிக்க பிரஜையான லுவிஸ் எலன் அவர்களின் தனிப்பட்ட அன்பளிப்பில் இந்த புதிய கட்டிடத்தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்க பிரஜையான லுவிஸ் எலன் அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றும் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து சிறுவர் வாட்டுத் தொகுதி மற்றும் இரத்த வங்கி என்பவற்றைத் திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள், புதிய சிறுவர் வாட்டுத்தொகுதியின் முதலாவது நோயாளியையும் பதிவுசெய்தார்.

சிவனொளிபாத மலை விகாரையின் விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர், வண. அக்கரெல்லே ஞானவங்ச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், ஏனைய சமய தலைவர்களும், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டபிளியு.டீ.ஜே. செனெவிரத்ன, தலதா அத்துகோரல, பிரதியமைச்சர் கருணாரத்ன பரனவிதான, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாரச்சி, .. விஜேதுங்க ஆகியோரும், தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல, மாகாண சுகாதார பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார, மருத்துவமனையின் பணிப்பாளர் எஸ்.ஜீ.எல். ரணவீர உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




இன்றுமுதல் புதிய பஸ் கட்டணம்


தனியார் துறையை போன்று இலங்கை போக்குவரத்து துறையிலும் புதிய பஸ்கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துசபை தலைமை அதிகாரி பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
புதிய பஸ்கட்டண மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டள்ளதாகவும் போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் தெரிவித்துள்ளன.
தனியார் பஸ்களில் புதிய பஸ் கட்டணம் காட்சிப்படுத்தப்படவேண்டும். பஸ் கட்டணம் உரியவகையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்கு நாடு தழுவிய ரீதியில் பரிசோதனைகள் இடம்பெறும் என்றும் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 பஸ்கட்டண அறவீடு மற்றும் பருவகால அனுமதி அட்டை வழங்காமை தொடர்பில் முறைப்பாடுகள் இருக்குமாயின் தொலைபேசியினூடாக அறிவிக்குமாறு போக்குவரத்து பொது முகாமையாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கான தொலைபேசி இலக்கம் 0115 559 595

ஆட்சியை கவிழ்க்க இனித்த சமூக வலைத்தளங்கள், இன்று ஆட்சிய விமர்சிக்கும் போது கசக்கின்றதா?



தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சமூக வலைத் தளங்கள் தன்னை மிகக் கடுமையாக விமர்சிப்பதாக கூறித் திரிவதானது இவ்வாட்சி பொது மக்களால் நிராகரிக்கப்படுகிறது என்ற செய்தியை அவரது வாயாலேயே ஏற்றுக்கொள்வதாக அமைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
இன்று உலகில் சமூக  வலைத்தளங்களின் தாக்கம் அதிகம் உள்ளமை மறுக்க முடியாத உண்மையாகும். கடந்த ஆட்சி மாற்றத்தின் போது சமூக வலைத்தளங்களின் தாக்கம் மிகவும் உச்சத்தில் நின்றமையை அவதானிக்க முடிந்தது. பல சிறிய விடயங்கள் மிகவும் பூதாகரமான விடயங்களாக மக்களுக்கு வெளிக்காட்டப்பட்டன. எம்மை நோக்கி பல கேள்விகளும் எழுப்பப்பட்டன. இதற்கு எம்மால் இயன்றளவு பதில் வழங்க முயற்சித்த போதும் மக்கள் அவற்றையெல்லாம் ஏற்கும் மனோ நிலையில் இல்லாதவாறு மக்கள் மனங்கள் ஊடகங்கள் வாயிலாக மாற்றப்பட்டிருந்ததன. ஜனாதிபதி மைத்திரி தனது வெற்றியின் ஆரம்ப காலத்தில் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அதிகமதிகம் புகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே ஊடகங்கள் தற்போதைய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக  மாறியுள்ள போது அவற்றை தற்போதைய ஆட்சியாளர்கள்  விமர்சிப்பதையும் முடக்க எத்தனிப்பதையும் அவதானிக்க முடிகிறது. இங்கு தான் நாம் அனைவரும் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விடயமுள்ளது. நாம் செய்த சில விடயங்களை விமர்சித்த மக்கள் அதனை இவ்வாட்சியாளர்களிடம் எதிர்பார்க்கவில்லை. அனால், இன்றைய ஆட்சியில் எம்மை மக்கள் எதற்காக விமர்சித்து புறந்தள்ளினார்களோ அதனை விட பன் மடங்கு விமர்சன வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஊழல் வாதிகளை தங்களோடு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கின்றனர்.
எம்மை விமர்சித்த அதே  மக்கள் இப்போது இவ்விரு ஆட்சிக் காலங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது எமது ஆட்சியை சரி காண்கிறார்கள். அன்று சமூக வலைத்தளங்கள் எம்மை நோக்கி  எழுப்பிய வினாக்களை இன்று இவ்வாட்சியாலர்களிடம் கேட்கும் போது பதில் அளிக்க முடியாது தவிக்கின்றனர். அப்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக இவ்வாட்சியை நோக்கிய விமர்சனங்களை முன் வைக்கின்றனர். அன்று இனித்த சமூக வலைத்தளங்கள் இன்று கசக்கின்றதென்றால் அது யாருடைய தவறென்பதை மக்கள் இலகுவாக அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் புலப்படுகின்ற விடயம் என்னவென்றால் இன்று இவ்வரசின் மதிப்பானது மக்களிடத்தில் பூச்சிய நிலைக்கு சென்றுவிட்டது என்பதாகும்.
மக்களும் பல விடயங்களில் எம்மை நோக்கி வருகின்ற வீதங்களில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே தின கூட்டத்தில் நாம் எதிர்பார்க்காதளவு மக்கள் ஒன்று கூடியிருந்தனர். இவைகள் எல்லாம் உண்மைகளை அறிந்து மக்கள் எம்மோடு கை கோர்ப்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது. இலங்கை மக்கள் எம்மோடு ஒன்றிணைவதை  சமூக வலைத்தளங்களை விமர்சிப்பதாலேயோ அல்லது அவற்றை முடக்குவதாலேயோ ஒருபோதும் தடைசெய்ய முடியாது என்ற செய்தியை ஜனாதிபதி மைத்திருக்கு இவ் ஊடக அறிக்கையினூடாக சொல்ல விரும்புகிறேன்.

ஊடகப் பிரிவு -