'பாதுகாப்பான நாடு - சுபீட்சமிக்க
நாடு'
என்ற
தொனிப்பொருளில்
72 ஆவது தேசிய
தின வைபவம்
பாதுகாப்பான நாடு, சுபீட்சமிக்க நாடு என்ற தொனிப்பொருளில் தேசிய
தின வைபவத்தை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைவாக
பெருமைக்குரிய வகையில் 72 ஆவது தேசிய தின வைபவம் சிறப்பான முறையில் நடத்தப்படவுள்ளது.
அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் மற்றும்
மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் வழிகாட்டலில் இம்முறை தேசிய தின
வைபவம் சிறப்பான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு
இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது. தேசிய தின வைபவக் கொண்டாட்டம் தொடர்பாக பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தை அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது பாதுகாப்பான நாடு, சுபீட்சம் மிக்க நாடு என்ற தொனிப்பொருளில் தேசிய தின வைபவத்தை நடத்துவதென
தீர்மானிக்கப்பட்டது. கடந்த வருடங்களிலும் பார்க்க இம்முறை தேசிய தின ஊர்வலத்தில்
கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது.
தொனிப்பொருளுக்கு ஏற்ற வகையில் கலாச்சார
நிகழ்வுகள் மாத்திரம் இதில் இடம்பெறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தமது உயிரைக் பெரிதாகக் கருதாது ஏனையோரின் உயிரைப் பாதுகாப்பதில் ஈடுபடுவோர்
ஒன்றிணைந்துள்ள வீர பொதுஜன பதனம என்ற அமைப்பு தேசிய தின ஊர்வலத்தில்
இணைந்துகொள்வதற்கு அனுமதி கேட்டுள்ளது. இவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கும்
இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசிய
கொடியை பறக்கவிடுவதற்கும் அத்தருணத்தில் நாடு முழுவதிலும் ஒவ்வொரு வீடுகளிலும்
மரக்கன்று ஒன்றை நாட்டுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
விசேடமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத
வகையில் கொண்டாட்டம் இடம்பெறும் பிரதேசத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும்,
வாகன போக்குவரத்தை
முன்னெடுப்பதற்கும் பிரதமர் உரிய பகுதியினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சரவை
உப குழு அங்கத்தவர்கள், அமைச்சின் செயலாளர்கள், முப்படையினர், பொலிஸ் உயர்
அதிகாரிகள் உட்பட பலர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.