18
ஆண்டுகளில் 44 குழந்தைகள்
உகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசிக்கிறார் 40 வயது மரியம் நபடான்ஸி. ஆப்பிரிக்க நாடுகளிலேயே
அதிகக் குழந்தைகள் பெற்ற தாய் இவர்தான்.
தன்னுடைய வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவத்திலேயே கழித்திருக்கும்
இவருக்கு 44 குழந்தைகள்!
இவற்றில் 6 இரட்டைக்
குழந்தைகள், 4 முறை மூன்று
குழந்தைகள், 3 முறை நான்கு
குழந்தைகள், 8 தனிக்
குழந்தைகள் என்று பிரசவித்திருக்கிறார். 44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர். தனியாளாக
இத்தனை குழந்தைகளையும் பார்த்துக்கொள்கிறார் மரியம்.
“என் சிற்றன்னையின் கொடுமையில் வளர்ந்தேன். ஒருநாள்
சாப்பாட்டில் விஷம் வைத்துவிட்டார். இதில் என்னுடன் பிறந்தவர்கள் 4 பேர் இறந்துவிட்டனர். நான் வெளியே
சென்றிருந்ததால் தப்பிவிட்டேன். என்னை 12 வயதில் 28 வருடம் மூத்தவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.
அந்த ஆள் ஒருநாள்
கூட அடிக்காமல் இருந்ததில்லை. தினமும் குடித்துவிட்டு ரகளை. நரக வாழ்க்கை.
விருப்பம் இல்லாவிட்டாலும் மறுக்க முடியாது, குடும்பம் நடத்திதான் ஆக வேண்டும்.
அவருக்கு நான்
மட்டும் மனைவியல்ல. பல பெண்கள் மூலம் ஏராளமான குழந்தைகள் உண்டு. வெளியில் வேலை
செய்து சம்பாதிக்க வேண்டும். வீட்டிலும் கடுமையான வேலை இருக்கும். இதில்
பெரும்பாலும் நான் கர்ப்பத்தோடுதான் இருப்பேன். ஆனாலும் குழந்தைகள் மூலமே கொஞ்சம்
மகிழ்ச்சியும் வாழ்க்கை மீதான பற்றும் எனக்கு ஏற்பட்டது.
கணவருக்குப் பல்வேறு ஊர்களில் மனைவிகள் இருந்ததால், ஆண்டுக்கு ஒருமுறை இரவில்தான் இங்கே வருவார்.
குடும்பம் நடத்துவார். அதிகாலை குழந்தைகள் கண் விழிப்பதற்குள் கிளம்பிவிடுவார்.
என் மூத்த மகனே 13 வயதில்தான் அவன்
அப்பாவைப் பார்த்தான். என்னுடைய பல குழந்தைகள் அவரை இதுவரை பார்த்ததில்லை.
1994-ம் ஆண்டு 13 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதற்குப்
பிறகு 2, 3, 4 என்று
குழந்தைகள் பிறந்துகொண்டே இருந்தன. என் அப்பாவுக்குப் பல மனைவிகள் மூலம் 45 குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஒரே தாய் மூலம் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்தது நான் மட்டும்தான்
என்கிறார்கள்.
25-வது குழந்தை பிறந்த பிறகு மருத்துவரிடம் சென்றேன். வயிற்றில் உருவான கருவைக்
கலைக்கச் சொன்னேன். பல கருக்கள் இருந்ததால் கலைப்பது உயிருக்கு ஆபத்தாக முடியும்
என்று கூறிவிட்டார்.
இப்படி ஒவ்வொரு முறை வாந்தி எடுக்கும்போதும் மருத்துவரிடம்
செல்வேன். அவரும் இது மரபணு பிரச்சினை. அதிகமான சினை முட்டைகள் உருவாகின்றன,
கலைக்க முடியாது என்று
கூறிவிடுவார். 44-வது
குழந்தைக்குப் பிறகு கர்ப்பப்பையை நீக்கிவிட்டேன்.
ஒரு நாளைக்கு 10 கிலோ சோள மாவு, 4 கிலோ சர்க்கரை, 3 பார் சோப் எங்கள் குடும்பத்துக்குத் தேவைப்படுகிறது.
நிரந்தர வேலை இல்லாவிட்டாலும் தினமும் எங்காவது வேலைக்குச் சென்றுவிடுவேன்.
ஒருநாள் கூட உடல்நிலை சரியில்லை என்று வீட்டில் இருக்க முடியாது. எப்படியோ இதுவரை
குழந்தைகளுக்குப் பட்டினி போடாமல் வாழ்ந்துவருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் மரியம்.
இவரது கதை வெளிவந்த பிறகு, சில அமைப்புகள் நன்கொடை திரட்டிக் கொடுக்கும்
முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
பிள்ளைப் பெறும் இயந்திரம்போல் இருக்கிறதே ஆப்பிரிக்கப்
பெண்களின் வாழ்க்கை!



0 comments:
Post a Comment