2004 வெடிகுண்டு தாக்குதல்:
முன்னாள் பிரதமர் மகன் உட்பட 19 பேருக்கு ஆயுள் சிறை,
19 பேருக்குத் தூக்கு தண்டனை
- வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

வங்கதேசத்தில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 19 பேருக்கு ஆயுள் சிறையும், மற்ற 19 பேருக்கு மரண தண்டனையும் விதித்து டாக்கா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேகதி அவாமி லீக் கட்சி சார்பில் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசினாவும் காயமடைந்தார். இந்த குண்டுவெடிப்பில் இருந்து அவருக்கு ஒரு பக்கம் காதுகேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.
 இந்நிலையில், டாக்காவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், அமைச்சர்கள் 4 பேர், புலனாய்வு துறை அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 49 பேர் சேர்க்கப்பட்டனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் இந்த குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் வங்கதேசத்தில் உள்ள ஹர்கதுல் ஜிஹாத் அல் இஸ்லாமி தீவிரவாத அமைப்பாகும். இந்தத் தீவிரவாத அமைப்புக்கு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் ரஹ்மான் ஆதரவு அளித்துள்ளது தெரியவந்தது.
மேலும், இந்த குண்டுவெடிப்பில் முக்கிய இலக்காக இருந்தது தற்போது பிரதமர் ஷேக் ஹசினா. ஆனால், குண்டுவெடிப்பி்ல படுகாயத்துடன் உயிர்பிழைத்தார். ஆனால், கட்சியின் முன்னாள் தலைவர் ஜில்லூர் ரஹ்மான், அவரின் மனைவி இவி ரஹ்மான் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக டாக்காவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 49 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி இருந்தனர். இதில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரீக் ரஹ்மான் உள்பட 19 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், 19 பேருக்குத் தூக்கு தண்டனையும் விதித்து, நீதிபதி ஷாகித் நூருதீன் தீர்ப்பளித்தார்.
இதில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தற்போது லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அந்நாட்டு அரசிடம் தனக்கு புகலிடமும் கேட்டுள்ளார். இதனால், தாரிக் ரஹ்மான் வசிக்கும் இடம் குறித்த தெரிவிக்க இங்கிலாந்து அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்று முன்னாள் பிரதமர் கலிதா ஜியா சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத்தீர்ப்பு குறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கான் கமல் கூறுகையில், வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து இங்குக் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.


வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான்

குண்டுவெடிப்பு நடந்த இடம்

முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, அருகே அவரின் மகன் ரஹ்மான்

குண்டுவெடிப்பில் உயிர்பிழைத்த தற்போதைய பிரதமர் ஷேக் ஹசினா

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top