தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கை

சாய்ந்தமருதில் தொடரும் ஹர்த்தால்
               
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்கு தனியான உள்ளூராட்சி சபையை அமைக்குமாறு கோரி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஹர்த்தால், கடையடைப்பு, வீதி மறியல் போராட்டம் போன்ற நடவடிக்கைகள் நேற்று (31) இரண்டாவது நாளாக இடம்பெற்றது .
நீதிமன்றத்தின் தடையுத்தரவையடுத்து வீதிமறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட போதும், ஹர்த்தால் இன்றும் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகிகள் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச சிவில் அமைப்புக்கள், இளைஞர் இயக்கங்கள் இணைந்து இப்போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.
சாயந்தமருதில் உள்ளூராட்சி சபையை வேண்டி நடத்தப்பட்டு வருகின்ற ஹர்த்தால் போராட்டம் நேற்று(31) வீதிமறியல் போராட்டமாக உருவெடுத்திருந்தது.
அதனை விலக்கிக்கொள்ளுமாறு அங்கு வந்த பொலிஸ் உயரதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு இணங்கவில்லை.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் பிரகடணப்படுத்தும் வரை மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம். நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம். எங்களது போராட்டத்தை தடை செய்யாதீர்கள் வேண்டுமானால் எங்களை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாயலின் தலைவர் வை.எம்.ஹனிபா அம்பாறை பிராந்திய எஸ்.எஸ்.பி. யிடம் தெரிவித்திருந்தார்.
தங்களது கோரிக்கை இன்று நேற்று முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல, இது யாருக்கும் எதிரானதும் அல்லஎமது மக்களின் நியாயமான கோரிக்கையை பெற்றுக் கொடுப்பதற்கு பொலிஸாரும் ஒத்துழைக்க வேண்டும்.
தீர்வு கிடைக்கும்வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எதிர்காலத்தில் மேலும் இப்போராட்டம் வலுப்பெறும் என்றும் பள்ளிவாயல் தலைவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
அதனால் பொலிஸார் நீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற்றுக்கொண்டு அதனை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கொடுத்தனர். அதன்பின்னர் நேற்று இரவு வீதிமறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இருப்பினும் இன்று அங்கு ஹர்த்தால் கடையடைப்பு போராட்டம் தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று ஹர்த்தால் போராட்டம் புதுவடிவம் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் நேற்று இரு வேளை தொழுகையை வீதியிலேயே நடத்தினர்.
மூன்று தினங்களாக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் குறிப்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதி அமைச்சர் பைஸல் காசீம், எம்.ஐ.எம்.மன்சூர் உட்பட எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சந்தித்து மக்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவில்லை. இதனால் சாய்ந்தமருது மக்கள் கடுமையாக ஆத்திரமடைந்துள்ளனர்.
சாய்ந்தமருது பிரதேசம் தற்போது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இருந்து வருகிறது. சாய்ந்தமருது பிரதேசத்தில் 30, 442 குடிமக்கள் வசித்து வருவதுடன் 19, 032 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top