பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தார் சசிகலா

பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுகிறார்

சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் .தி.மு. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள கூடுதல் உரிமையியல் அமர்வு நீதிமன்றத்தில் மாலை சரணடைந்தனர். ஆனால், சுதாகரன் சரணடையவில்லை என்று கூறப்படுகிறது. சரணடைந்த சசிகலா, இளவரசி ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்ததோடு, உடனடியாக பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய இரண்டு வாரம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா மனுவை தள்ளுபடி செய்ததோடு, உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா, அங்கு கையை ஓங்கி அடித்து மூன்று முறை சபதம் எடுத்துக் கொண்டார். பின்னர், ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்றார். அங்கு எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய சசிகலா, சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். மாலை 5.15 மணிக்கு சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு சென்றார். அவருடன் இளவரசியும் சென்றார்.


கூடுதல் உரிமையியல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஷ்வத் நாராயணா முன்பு சசிகலா மற்றும் இளவரசி  ஆகியோர் சரணடைந்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட உள்ளனர்ஆனால், சுதாகரன் நீதிமன்றத்தில் சரணடையவில்லை. அவர் நாளை சரணடைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 சசிகலா தன்னுடன் 3 சிறப்பு தலையணைகளையும் கொண்டு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


சசிகலா பார்க்க அங்கு, துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலா கணவர் நடராஜன் ஆகியோர் சிறை வளாகம் வந்தனர். சசிகலா சரணடைவதை முன்னிட்டு, தமிழக கர்நாடக எல்லையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பரப்பன அக்ரஹார கோர்ட் வளாகத்திலும் அதிகளவில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு அதிகளவு பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top