பலஸ்தீனர்களை அகதிகளாக்கிய

மோசே சப்டியின் நிகழ்வில் ஹக்கீம்

      முஸ்லிம் முற்போக்கு முன்னணி விசனம்


பலஸ்தீன முஸ்லிம்களின் இருப்பிடங்களை தகர்த்து தரைமட்டமாக்கிவிட்டு, ஜெரூசலம் உட்பட அந்த புனித பூமியில் யூதர்களை பலவந்தமாக குடியமர்த்தக்கூடிய, பாரிய வீட்டுத்திட்டங்களை உருவாக்கக்கூடிய படுமோசமான செயலைச் செய்கின்ற மோசே சப்டி என்பவர் இலங்கைக்கு வந்து கலந்து கொண்ட இலங்கை கட்டட கலைஞர்களுடைய செயலமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்  கலந்து கொண்டதையிட்டு முஸ்லிம் முற்போக்கு முன்னணி தனது விசனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான .எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இஸ்லாத்தின் விரோதியாக, முதல் ஆசானாக, கணிக்கப்படுகின்ற சியோனிசவாதி மோசே தயானுடைய நடவடிக்கைகளை முழு உலக முஸ்லிம்களும் எதிர்க்கும் வேளையில் அவருடைய இஸ்லாமிய விரோத செயற்பாடுகளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறியாமலிருப்பது சமுதாயத்தை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவர் இலங்கைக்கு வரக்கூடாது என்று இலங்கை பலஸ்தீன  நட்புறவு சங்கமும் பூரண அறிக்கையை வெளியிட்டுள்ளது. சர்வதேச முஸ்லிம் விரோதியான சியோனிசவாதியினுடைய  கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதையிட்டு சமுதாயம் தமது வியப்பினைத் தெரிவிக்கின்றது.

இலங்கையில் எந்த விதமான கட்டட நிர்மாணத்திற்கும் அவரது பங்களிப்பை பெறக்கூடாது, அவர் இந்த நாட்டுக்கு வருவதற்கும் இடமளிக்கக் கூடாது என்பதுதான் இந்த நாட்டு மக்களுடைய ஏகோபித்த குரலாக ஒலிக்கின்ற நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதில் கலந்து கொண்டதையிட்டு முஸ்லிம் முற்போக்கு முன்னணி தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றது - என்றும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top