வெற்றிபெறுமா கைதிகளின் உண்ணாவிரதம்?

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழர் வாழ்வில் புது நம்பிக்கை ஒளி வீசத் தொடங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.மஹிந்த அரசுடன் ஒப்பிடுகையில் இந்த அரசு சிறுபான்மை இன மக்களுக்கு ஓரளவு சாதகமாக இருப்பதை அவதானிக்கலாம்.
தமிழர்களில் ஓரிரு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நீண்ட காலப் பிரச்சினையான  கைதிகளின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்;அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.அந்தக் கோரிக்கையை முன்வைத்து கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி நாடுபூராகவும் உள்ள சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக வெளியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.அதே ஆண்டு  நவம்பர் மாதம் 7 ஆம் திகதி இது தொடர்பில் முடிவு ஒன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தத்தைத்
தொடர்ந்து ஒக்டோபர் 17 ஆம் திகதி போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.அரசு கூறியதுபோல்,நவம்பர் 5 ஆம் திகதி தீர்மானம் ஒன்றை அறிவித்தது.
அந்தத் தீர்மானத்தின்படி,தண்டனை வழங்கப்பட்ட கைதிகள்,நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டு வரும் கைதிகள் மற்றும் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் என கைதிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.
அவற்றுள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 62 கைதிகளை பிணையில் விடுதலை செய்வது என்றும் 32 கைதிகள் முதற்கட்டமாக விடுதலை செய்யப்படுவர் என்றும் அரசு அறிவித்தது.இந்தத் தீர்மானத்தை எதிர்த்து அனைத்துக் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரி மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த நிலையில்,வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியைச் சந்தித்து கைதிகளின் விடுதலையை வலியுறுத்தினார்.இது தொடர்பில் மீண்டும் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்  என ஜனாதிபதி உறுதியளித்தார்.
இதற்கிடையில் தமக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.அல்லது புனர் வாழ்வளிக்கப்பட்டாவது தாம் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி அந்தக் கைதிகள் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றையும்  அனுப்பி வைத்தனர்.
அந்தக் கடிதம் தொடர்பில் ஜனாதிபதி சட்டமாதிபருடன் பேச்சு நடத்தி ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டு வரும் 85 கைதிகளுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களை விடுதலை செய்தல் என்பதே அந்தத் தீர்மானமாகும்.
நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அந்தத் தீர்மானம்  அறிவிக்கப்பட்டதும்,அரசியல் கைதிகள் அந்தத் தீர்மானத்தை ஏற்று ஒரு மாதத்துக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த அவர்களது  உண்ணாவிரத போராட்டத்தைக் கை விட்டனர்.
அந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டு  10 நாட்களுக்குள் அவர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் காரணமாக கைதிகளின் போராட்டம் வெற்றி பெற்றது என்றே அப்போது கருதப்பட்டது.ஆனால்,அரசு அறிவித்த தீர்மானத்தின்படி எதுவும்நடக்கவில்லை.இதனால்,இன்று மீண்டும் கைதிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.கைதிகளின் உறவினர்களும் கடந்த வருடப் போராட்டத்தைப் போன்று இந்தப் போராட்டத்தை ஊக்குவித்து சிறைச்சாலைகளுக்கு வெளியே போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு அரசு உரிய இனியாவது ஏமாற்றாமல் உரிய பதிலை வழங்க வேண்டும்.இந்த விடயத்தை இனியும் அரசால் இழுத்தடிக்கமுடியாது.கைதிகளின் விடுதலை என்பது இப்போது சர்வதேசம் வரைப் பேசப்படுகின்றது.அவர்களின் விடுதலையை வலியுறுத்தி சர்வதேசமட்டத்தில் இன்று தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது சர்வதேச ரீதியில் பேசு பொருளாக மாறியுள்ளதால் அரசு இந்த விவகாரத்தை இனியும் பொடுபோக்காகஇருக்கமுடியாது.
நல்லாட்சி என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய மைத்திரி-ரணில் கூட்டு ஓரிரு விடயங்களில் தடம் புரண்டாலும்,அநேகமான விடயங்களில் அந்த அரசு நல்லாட்சி என்ற கருத்திட்டத்துக்கு உட்பட்டு செயற்படுவதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.
அரசமைப்புத் திருத்தம்,சுயாதீன ஆணைக்கு குழுக்கள் மீள அமைப்பு போன்ற மஹிந்தவின் ஆட்சியில் நினைத்துப் பார்க்க முடியாத பல மாற்றங்களை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.இந்த அனைத்து மாற்றங்களும் நல்லாட்சியின் ஆணி வேர்களாக இருக்கின்றன.
அந்த வகையில்தான், இந்தக் கைதிகளின் போராட்டமும் அமைந்துள்ளது..அந்தப் போராட்டத்தை மதித்து இந்த அரசு ஏதேவோர்  ஏற்பாட்டின் கீழ் அவர்களை விடுதலை செய்வதுதான் ஜனநாயகமாகும்.
மஹிந்தவின் ஆட்சியில் பல  முறைகள்  போராட்டங்கள் நடத்தியும் கோரிக்கைகள் விடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த ஆட்சியிலும் அப்படி நடந்துவிடக் கூடாது என்று கைதிகள் விரும்புகின்றனர்.
கைதிகளின் விடுதலை தொடர்பிலான மஹிந்த தரப்பின்  குற்றச்சாட்டுக்கள் ,விமர்சனங்களையெல்லாம் கணக்கில் எடுக்காது மக்களுக்குத் தேவையான நல்லாட்சியைத் தொடர்ந்தும் உறுதிப்படுத்துவது அரசின் கட்டாய கடமையாகும்.அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.ஆகவே,இந்தப் போராட்டத்தை மதித்து கைதிகள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழர்களும் விரும்புகின்றனர்.

[ எம்..முபாறக் ]


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top