32 வருடங்களுக்கு முன் கல்முனையில் அஷ்ரப்

முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி விளக்காத
தமிழ் பிரதிநிதிகளை  நாம்
எவ்வாறு நம்பி இருப்பது?
கல்முனையில் அஷ்ரப் கேள்வி

தமிழ் மக்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டால், தமிழ் மக்களிடையே முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்பதற்கு தமிழ் தலைவர்கள் உறுதியான விளக்கம் ஒன்றையும் இன்னும் கூறவில்லை. இப்படியான நிலையில் நாம் எவ்வாறு தமிழ் பிரதிநிதிகளை நம்பியிருப்பது.
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கல்முனையில்இக்பால் சன சமூக நிலையத்தால்" ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்..
அன்று மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் மேலும் பேசுகையில்,
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் நியாயபூர்வமான ஒன்று என்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், தமிழ் மொழி பேசுவதன் காரணமாக முஸ்லிம் மக்களும் தமிழர்களே என்னும் கூற்றை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
முஸ்லிம் சமுதாயமும் சுய மரியாதையுள்ள சமூகம்தான் எங்களுக்கும் தமிழ், சிங்கள சமூகத்தவர்களைப் போன்று அபிலாஷைகள் உள்ளன. எமது எதிர்கால மக்களின் நிலைப்பாட்டை நிர்ணயிப்பதற்கு முஸ்லிம்களாகிய நாங்களும் உரிமை பெற்றவர்கள்.
எந்த ஒரு தீர்வும் தமிழ் மக்களைப் பாதித்து விடக்கூடாது என இந்திய அரசு தனது கவனத்தை தமிழ் மக்களுக்காகச் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதைப் போன்று சிங்கள சமூகத்தைப் பாதித்து விடுமா என இலங்கை அரசும் தனது கவனத்தைச் செலுத்துகின்றது.
ஆனால், மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்களின் எதிர்காலத்தைப்பற்றி பேசுபவர்கள் யார்?
எது எப்படி இருப்பினும் எம்மைப் பொறுத்த வரையில் நிரந்தர தீர்வுக்கான உயர் மட்டப்பேச்சு வார்த்தைகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின்  பிரதிநிதித்துவம் அவசியம் இடம்பெறல் வேண்டும்.
எந்த தீர்வு மூலமாகவும் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பலம் பிரிக்கப்படக்கூடாது.இவ்வாறு மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கல்முனையில் தெரிவித்திருந்தார்.
(ஆதாரம்: தினபதி 1987.01.31 ஆம் திகதி சனிக்கிழமை)



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top