ஹரீஸ் எம்.பி ஆதரவளிக்கும் அணியை
சாய்ந்தமருது மக்கள் புறக்கணிப்பர்
கல்முனை மாநகர சபை உறுப்பினர்
அஸீம் தெரிவிப்பு



அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற வில்லை. 43 தடவை சந்தித்து பேசியும் எந்த முடிவும் இல்லாமல் இழுத்தடிக்கப்படுகிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், குறித்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் வஜிர, அமைச்சர் றிசாத் உட்பட எல்லோரும் எங்களது கோரிக்கையை ஏற்றும் எங்களது கல்முனை தேர்தல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தான் அதனை தடுக்கிறார்.  அவர்களின் கடந்த உயர்பீட கூட்டத்தில் சாய்ந்தமருதுக்கு சபை கொடுத்தால் இரத்த ஆறு ஓடும் என்று பேசியதாக  அறிகிறோம் என சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய சாய்ந்தமருது - மாளிகைக்காடு மக்கள் பணிமனை இன்று 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்தார். 

மிகநீண்டகாலக் கோரிக்கையான சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபைக்கோரிக்கை பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டும் இற்றைவரை வழங்கப்படாமல் நொண்டிச் சாட்டுக்களைக்கூறி காலம் கடத்தி வருவதையிட்டு எமது பலத்த கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


கல்முனை காவலனாக பேசப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை கல்முனை தேர்தல் தொகுதியில் உள்ள சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்க தயாராக உள்ளேன் என  பகிரங்கமாக அறிவிப்பாரா என சவால் விடுக்கிறேன் என வை.எம். ஹனிபா இங்கு சவால் விடுத்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் .ஆர். எம். அஸீம் கருத்து தெரிவிக்குகையில்,
எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி எந்த கட்சியை ஆதரிக்கிறாரோ அந்த கட்சியை நாங்கள் எதிர்ப்போம். 1987 தொடக்கம் இற்றை வரைக்கும் பல்வேறு தரப்பு அரசியல்வாதிகளிடமும் எமது கோரிக்கை முன்வைக்கப்பட்டும் அவை நியாயமற்ற காரணங்களைக்காட்டி வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றமை வெளிப்படையானதாகும் என்றார்.


சாய்ந்தமருது - மாளிகைக்காடு மக்கள் பணிமனையினால் அறிக்கை ஒன்றும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  
  


உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய
 மக்கள் பணிமனை,
சாய்ந்தமருது - மாளிகைக்காடு.

மிகநீண்டகாலக் கோரிக்கையான சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபைக்கோரிக்கை பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டும் இற்றைவரை வழங்கப்படாமல் நொண்டிச்சாட்டுக்களைக்கூறி காலம் கடத்தி வருவதையிட்டு எமது பலத்த கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

1987 தொடக்கம் இற்றை வரைக்கும் பல்வேறு தரப்பு அரசியல் வாதிகளிடமும் எமது கோரிக்கை முன்வைக்கப்பட்டும் அவை நியாயமற்ற காரணங்களைக்காட்டி வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றமை வெளிப்படையானதாகும்.  இக்கோரிக்கையை நிறைவேற்றித்தருவோமென தேர்தல் உறுதி மொழியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் தலைமையில் 2015ம் ஆண்டு கல்முனை சந்தாங்க்கேணியில் நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரச்சார மேடையில், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பகிரங்க வாக்குறுதி வழங்கி, அவராலும் வெளிப்படையாக ஏமாற்றபட்டுவருகின்றோம்.

எம்மிடம் பலமுறை வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றுள்ள பிரதிநிதிகளால் தொடர்ந்தும் நன்றியற்ற முறையில் ஏமாற்றப்பட்டுள்ளவர்கள்தான் சாய்ந்தமருது மக்கள் . அதிலும், ஒரு பொறுப்புள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்தான் பிரதமருக்கு எழுதிக் கொடுத்து வாசிக்கச் சொன்னதாகவும், தேர்தலை வெற்றி கொள்வதற்காக அவ்வாறு செய்தேன் என வெளிப்படையாக மேடையில் கூறி இருப்பது  இம்மக்களை எப்படி கணக்கிலெடுத்துள்ளார் என்பதையும், எவ்வாறு இம்மக்கள் திட்டமிட்டு ஏமாற்றப்படுள்ளனர் என்பதற்கும் நல்லதொரு  உதாரணமாகும்

எனவே இதற்கு ஒரு பாடமாகத்தான்  கடந்த 2017 நவம்பர் எழுச்சியும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சகல அரசியல் கட்சிகளையும் குறிப்பாக கல்முனைத் தொகுதியில் ஜாம்பவானாக திகழ்ந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வீழ்த்தி, சாய்ந்தமருதிலிருந்து கல்முனை மாநகரசபைக்கு   9 உறுப்பினர்களையும்,   ஒரு உறுப்பினரை  காரைதீவு பிரதேச சபைக்கு மாளிகைக்காட்டிலிருந்து அனுப்பி இக்கோரிக்கை தொடர்பாக மக்கள் பலம் நிரூபிக்கப்பட்டது.   

இந்நிலையில் தான், இம்மக்களின் வாக்குகளைப் பெற்று பலமுறை பாராளுமன்றம் சென்றுள்ள   இத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு தேவையற்ற காரனங்களைக் கூறி தொடர்ந்தும் நன்றியற்ற விதத்தில் தடையாக அமைந்து வருகின்றார்

கல்முனையில் முஸ்லிம்களின் இருப்புக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்பதை சாய்ந்தமருது மக்கள் ஆதார பூர்வமாக நிரூபித்த பின்னரும் கல்முனை தமிழ் பிரேதேச செயலகக் கோரிக்கைக்கும் , சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையையும் தொடர்புபடுத்தி தேவையற்ற முறையில் புதிய முடிச்சைப் போட்டு, புது விதமான தடைகளை ஏற்படுத்தியுள்ளார்

சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கைக்கும், கல்முனை தமிழ் பிரதேச செயலகக்  விடயத்துக்கும்  எதுவித தொடர்புகளும் இல்லை எனபதை ஆதார  பூர்வமாக  நிரூபித்தும் உள்ளோம், அவ்வாறு அவருடன் நேரடியாகவே நிரூபிக்கவும் நாம் தயார்,  அதற்கு அவர் தயாரா ?

எனவே,  எமது இக்கோரிக்கை இன்னும் தடுக்கப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி  குறிப்பிட்ட விடயங்களுக்கான அமைச்சருக்குரிய அதிகாரங்கள் இருக்கின்ற நிலையில், சாய்ந்தமருதுக்கான  தனியான நகரசபையைப்  பிரகடனப்படுத்தத் தவறுமிடத்து, அல்லது தொடர்ந்தும் நொண்டிச்சாட்டுக்களைச் சொல்லி தடுக்கபடுமிடத்து, எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் இவர்களுக்கெல்லாம் தகுந்த பாடத்தினை மீண்டும் புகட்டும் பொருட்டு மாற்று சிவில் சமூக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு  எதிர்வரும் தேர்தலிலும் சுயாதீனமான  முடிவினை மக்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்வோம் என்பதை  வெளிப்படையாகக் கூறிக்கொள்கின்றோம் .


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top