நினைவூட்டுகின்றோம்

விரைவில் கிடைக்கப் போவது கல்முனை கரையோர மாவட்டமா?

அல்லது பிரதி அமைச்சர் பதவி ராஜினாமாவா?

மக்கள் கேள்வி!


கரையோர மாவட்டம் இல்லையேல்
பதவி துறந்து போராடடத்தில் குதிப்பேன்!

பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் (2016.07.11)


அரசியல் யாப்பு மாற்றத்தின்போது அம்பாறை மாவட்டத்தில் புதிதாக கல்முனை கரையோர மாவட்டம் உள்ளடக்கப்படா விடடால், தான் பிரதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதுடன் புதிய அரசியலமைப்புக்கான வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களிப்பேன் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்ட பின்னர் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முக்கிய கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் ஆணையாளர் ஜெய்.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிடடார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; தற்போது எமது நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் மிகவும் தீவிரமாக சிந்திக்கப்படுகிறது. இதன்போது இனப்பிரச்சினை தீர்வு, வடக்கு- கிழக்கு மாகாண இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரம் என்றெல்லாம் பேசப்படுகின்றபோதிலும் இந்நாட்டில் 10 வீதமாக வாழ்கின்ற முஸ்லிம்களின் அபிலாஷைகள் தொடர்பில் எதுவும் பேசப்பட்ட்தாகத் தெரியவில்லை.

குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்ட கோரிக்கையாக இருந்து வருகின்ற கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் அரசாங்கம் மூச்சுக்கூட விடுவதாக இல்லை. அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் எதிர்ப்பார்கள் என்பதற்காக முஸ்லிம்களின் அபிலாஷைகளை குழிதோண்டி புதைத்து விட முடியாது. அரசாங்கம் நினைத்தால் ஓரிரு நாட்களில் கல்முனை கரையோர மாவட்டத்தை உருவாக்க முடியும். அதற்காக நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியும்.

அம்பாறை மாவட்டத்தில் 70 வீதமாக தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற நிலையில் பெரும்பான்மையினத்தவரே தொடர்ந்தும் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு வருகின்றார். இது எமது மக்களுக்கு இழைக்கப்படுகின்ற பாரிய அநீதியாகும். இவற்றை எல்லாம் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அதனால் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி நான் வீதியில் இறங்கி போராடப்போகின்றேன். மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன். அதற்கு எமது கட்சித் தலைவரின் அனுமதியை கோரவிருக்கின்றேன். பிரதி அமைச்சுப் பதவிக்காகவும் வாகனங்களுக்காகவும் எமது சமூகப் பிரச்சினைகளை கண்டும்காணாமலும் நான் மௌனமாக இருக்கப்போவதில்லை.

இன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களின் நிலை மிகவும் கேள்விக்குறியாக மாறி வருகின்றது. எமது ரசூல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது களங்கம் ஏற்படுத்துகின்ற அளவுக்கு ஞான சார தேரரின் அட்டகாசங்கள் தலைவிரித்தாடுகின்றன. எமது ரசூல் தூசிக்கப்பட்டமை தொடர்பில் நாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ ஒரு கண்டன அறிக்கையை கூட வெளியிட்டு முஸ்லிம்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லவில்லை என்பதையிட்டு நான் கவலையடைகின்றேன்.


இந்த நிலை நீடிக்குமாயின் கடந்த ஆட்சியாளர்கள் மீது முஸ்லிம்கள் வெறுப்புக் கொண்டு, அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தது போன்றதொரு சூழ்நிலை ஏற்படலாம் என்று இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன்என்றார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top