மும்பை ரயில்கள் குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு

5 பேருக்கு தூக்கு; 7 பேருக்கு ஆயுள் சிறை


மும்பை புறநகர் ரயில்களில் கடந்த 2006ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  மேலும் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 மும்பையில் உள்ள திட்டமிட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றத்தில் (எம்சிஓசிஏ) கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் நேற்று 30 ஆம் திகதி புதன்கிழமை அளித்தது.
 மும்பையின் 7 புற நகர் ரயில்களின் முதல் வகுப்புப் பெட்டிகளில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி 10 நிமிட இடைவெளியில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.
 இந்தக் குண்டு வெடிப்பில், அந்த ரயில்களில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் ட்பட 189 பேர் உயிரிழந்தனர். 829 பேர் பலத்த காயமடைந்தனர்.
 இந்தக் குண்டு வெடிப்புகள் தொடர்பாக மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) விசாரணை நடத்தி, 13 பேரைக் கைது செய்தது. இதுதொடர்பாக 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பை எம்சிஓசிஏ சிறப்பு நீதிமன்றத்தில் 30 பேருக்கு எதிராக ஏடிஎஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், கைது செய்யப்பட்ட 13 பேரைத் தவிர்த்து, எஞ்சிய 17 பேர் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த 17 பேரில், 13 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், அவர்களில் லஷ்கர்--தொய்பா அமைப்பு பயங்கரவாதி ஆஸாம் சீமாவும் ஒருவர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர், குண்டு வெடிப்புகளில் தங்களுக்குத் தொடர்பிருப்பதை முதலில் ஒப்புக் கொண்டனர். எனினும், பின்னர் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.
 இதனிடையே, வழக்குத் தொடர்பாக அரசுத் தரப்பில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள், 5 ஐஏஎஸ் அதிகாரிகள், 18 மருத்துவர்கள் உள்ளிட்ட 192 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில், 51 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. ஒருவர், நீதிமன்றச் சாட்சியாக செயல்பட்டார்.
 இந்நிலையில், மும்பை எம்சிஒசிஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2008ஆம் ஆண்டு திடீரென இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், அந்த இடைக்காலத் தடையை 2 ஆண்டுகள் கழித்து, அதாவது 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டது.
 இதைத் தொடர்ந்து, மும்பை எம்சிஓசிஏ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கிய வழக்கு மீதான விசாரணை, கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்தது. பின்னர், அந்த வழக்கு மீதான தீர்ப்பு, திகதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.
 இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த 11ஆம் திகதியன்று மும்பை எம்சிஓசிஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது.
கமால் அகமது அன்சாரி (37)
முகமது பைசல் ஷேக் (36)
 சித்திகி (30)
நவீத் ஹுசேன் கான் (30)
ஆசிஃப் கான் (38)
 தன்வீர் அகமது அன்சாரி (37)
 முகமது மஜீத் ஆலம் ஷஃபி (32)
ஷேக் ஆலம் ஷேக் (41)
முகமது சாஜித் அன்சாரி (34)
முஜாமில் ஷேக் (27)
சோஹைல் மெஹ்மூத் ஷேக் (43)
ஜமீர் அகமது ஷேக் (36)
ஆகிய 12 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஒருவரை மட்டும் விடுதலை செய்தது.
 அதன்பின்னர், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 12 பேருக்கும் தண்டனை விதிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்று வந்தன. அப்போது, அரசுத் தரப்பில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 12 பேரில் 8 பேருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பான இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மும்பை எம்சிஓசிஏ சிறப்பு நீதிமன்றம், தண்டனை விவரங்களை வெளியிடுவதை ஒத்திவைத்தது.
 இந்நிலையில், மும்பை எம்சிஓசிஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி யாதின் டி.ஷிண்டே 12 பேருக்கான தண்டனை விவரங்களை புதன்கிழமை அறிவித்தார்.  அதன்படி,
கமால் அகமது அன்சாரி
 முகமது பைசல் ஷேக்
சித்திகி
நவீத் ஹுசேன் கான்
ஆசிஃப் கான்  ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்தார்.
 தன்வீர் அகமது அன்சாரி,
முகமது மஜீத் ஆலம் ஷஃபி,
 ஷேக் ஆலம் ஷேக்,
முகமது சாஜித் அன்சாரி,
முஜாமில் ஷேக்,
சோஹைல் மெஹ்மூத் ஷேக்,
ஜமீர் அகமது ஷேக்
ஆகிய 7 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இத்துடன், 11 பேருக்கு தலா ரூ. 11 லட்சமும், முகமது பைசலுக்கு மட்டும் ரூ. 15.45 லட்சமும் என மொத்தம் ரூ.1.51 கோடி அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 5 பேருக்கான மரண தண்டனையை நீதிபதி அறிவித்தபோது, "அவர்கள் அனைவரையும் மரணிக்கும் வரை தூக்கிலிட வேண்டும்' என்றார்.
 மேல்முறையீடு செய்ய முடிவு:
 இதனிடையே, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும், அவர்களது உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

 இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டோருக்கு சட்ட ரீதியிலான உதவிகளைச் செய்துவரும் ஜமாய்த்-உலேமா--மகாராஷ்டிரா என்ற அமைப்பும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top