அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டதற்குப் பின்னர்
இன்று மைத்திரியை சந்திக்கிறார் ரணில்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்தித்துப் பேசவுள்ளார் என்று ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்தே இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் இருக்கவில்லை. அவர் பொலன்னறுவ சென்றிருந்ததால் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இன்று மாலை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், ரணில் விக்கிரமசிங்க, ஏனைய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரியவும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளை ஜனாதிபதி நிராகரித்ததால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நேரடியாகச் சந்தித்துக் கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top