மக்களின் குறைகளைக் கண்டறிந்து சரி செய்வதே

மறைந்த மன்சூருக்கு செய்யும் பிரார்த்தனைகளாக முடியும்.



அஷ்ஷஹீத்  எம்.வை.எம்.மன்சூர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்ப காலத்தில் வளர்த்து தன் உயிரையே உரமாககிச்சென்றுவிட்டார். அன்னார் வபாத்தாகி 26 வருடங்கள் கழிந்து விட்டன. அன்னாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக!
அன்றிருந்த அச்சமான சூழலில் முஸ்லிம் சமூகத்தின் குரலாக உருவாக்கப்பட்ட  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றுவதற்கு இவரைப் போன்று பலர் உயிர் தியாகங்களைச் செய்துள்ளனர்.
தற்போது இக்கட்சியை நம்பி  மக்கள் வாக்களித்து அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் தேவைகள், குறைகளைக் கண்டறிந்து சரி செய்வதே  மறைந்த மன்சூர் போன்றவர்களுக்கு செய்யும் பிரார்த்தனைகளாக முடியும்.
அம்பாறை மாவட்டத்தில் அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளிடம்  கட்சிக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்!
அம்பாறை மாவட்டத்தில் கடந்த  2004 12.26 ஆம் திகதி தாக்கிய (சுனாமி) பேரலையினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அக்கரைப்பற்று நுரைச்சோலைப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டதுதான், நுரைச்சோலை வீட்டுத் திட்டம். சவூதி அரேபியாவின் ‘நன்கொடை நிதியம்’ இதற்காக, இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 552 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியது.
கிட்டத்தட்ட 40 ஏக்கர் காணியில் 500 வீடுகள், வைத்தியசாலை, சந்தைக் கட்டடத் தொகுதி, ஆண் – பெண் பாடசாலைகள், விளையாட்டு மைதானம், பள்ளிவாசல் மற்றும் பஸ் தரிப்பிடங்கள் என்று, அனைத்தும் உள்ளடங்கிய ஒரு ‘குட்டி நகரம்’தான் நுரைச்சோலை வீட்டுத் திட்டம்
 இன்று அந்த குட்டி நகரம் காடு பிடித்து, சேதமடைந்து, விலங்குகளின் உறைவிடமாக மாறியிருக்கிறது. இந்த வீட்டுத் திட்டத்திலுள்ள கட்டிடங்களில் இருந்த பெறுமதியான பொருட்கள் கூட களவாடப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் நியமிக்கபட்டுள்ளார்.  இப்போது, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களென்று, முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த மூவர் மட்டுமே இம்மாவட்டத்தில் உள்ளனர். அவர்களில் இருவர் பிரதி அமைச்சர்கள்.  முஸ்லிம் காங்கிரஸ் இப்போது ஆளுந்தரப்பில்தான் உள்ளது. அதுமாத்திரமல்லாமல், அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்ற கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. இக்கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மத்திய அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் இவ்விடயம் கவனிக்கப்படாதிருப்பது கவலைக்குரிய விடயமே!  

இவ்வீடுகளை  பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் இன்னும் காலத்தை நீடிக்காமல்  உடனடி நடவடிக்கை எடுப்பார்களா? இது மக்களினதும் சமூக நலன் விரும்பிகளினதும் விருப்பமும் வேண்டுகோளுமாக இருந்துகொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top