ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு!



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து உபசாரம் ஒன்றிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மத்திய பிரதேசத்தில் இடம்பெறும் கும்பமேளா நிறைவு விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, சாஞ்சி பகுதிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள அநாகரிக தர்மபாலவின் உருவச் சிலையையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான சந்திப்பு குறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இந்திய-இலங்கை உறவு மிகவும் சிறப்பானது. இனி வரும் காலத்தில் இந்த உறவு மேலும் வலுப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
 "உஜ்ஜைன் கும்பமேளாவில்சிறிசேன பங்கேற்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்தியா-இலங்கை இடையே சமூக பண்பாட்டு உறவு எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை இது வெளிக்காட்டுகிறது' என்றும் மோடி கூறியுள்ளார்.
 மோடியுடனான சந்திப்பு குறித்து சுட்டுரையில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, "இந்தியா-இலங்கை இடையே நிலவி வரும் நல்லுறவு மிகச் சிறந்தது. நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுடனான இலங்கையின் உறவு மேலும் வலுவடைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:
 இந்த சந்திப்பின்போது இலங்கையுடனான மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென்று இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இலங்கையில் அனைத்து பிரிவினரும் கண்ணியத்துடனும், சம உரிமையுடனும் வாழ சிறிசேன மேற்கொண்டுள்ள முயற்சிகளை மோடி பாராட்டினார். இது தவிர இரு நாடுகளிடையே வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்..






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top