இழப்பீடுதான் எங்களின் தேவை
சல்மான் கார் விபத்தில் பாதித்தோர் தெரிவிப்பு

நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை விதிப்பதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எங்களுக்குத் தேவை எல்லாம் இழப்பீடு மட்டுமே என கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், 2002-ல் நடந்த அந்த விபத்தில் தனது காலை இழந்த அப்துல்லா ரவுஃப் ஷேக், "நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை விதிப்பதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எங்களுக்குத் தேவை எல்லாம் இழப்பீடு மட்டுமே.
இந்த 13 ஆண்டுகளில் என்னை யாரும் வந்து பார்த்ததில்லை. சிறு வேலைகள் செய்து என் குடும்பத்தை மிகவும் கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகிறேன்.
இருப்பினும், சல்மான் கான் மீது நான் எப்போதும் விரோதம் கொண்டதில்லை. இன்றளவும் அவரது படங்களைப் பார்த்து வருகிறேன்.
சல்மான் தண்டிக்கப்படுவதால் மட்டும் நான் இழந்த கால் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக எங்கள் வாழ்வாதாரத்துக்கு போதிய இழப்பீடு வழங்கினால் அதுவே போதுமானது" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், கார் விபத்தில் பலியான் நூருல்லா மெஹ்பூப் ஷரீபின் மனைவி கூறும்போது, "எங்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், நாளுக்கு நாள் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் அந்தப் பணம் எங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று கூற முடியாது. எனவே, என் மகனுக்கு ஒரு வேலை கிடைத்தால் போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை
மும்பை நீதிமன்றம் தீர்ப்பு
மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னதாக இன்று 6ஆம் திகதி  (புதன்கிழமை) காலை நீதிமன்றம், இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து சல்மான் கான் தண்டனை தொடர்பாக வாதங்கள் நடைபெற்றன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மதியம்  இன்று 1.10-க்கு தீர்ப்பை ஒத்திவைத்தார்.
மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, நீதிபதி தண்டனை விபரத்தை அறிவித்தார். சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சல்மான் கான் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை உயர் நீதிமன்றத்துக்கு மே10-ல் கோடை விடுமுறை தொடங்குகிறது. எனவே, அதற்குள் சல்மான் கான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வழக்கில் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டி.டபிள்யூ தேஷ்பாண்டே இன்று தீர்ப்பு வழங்கினார். நீதிபதி கூறும்போது, உங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகிவிட்டது.

சம்பவத்தன்று நீங்கள் மது அருந்தியிருந்தீர்கள். அன்றைய தினம் நீங்களே காரை ஓட்டியிருக்கிறீர்கள். மேலும் லைசன்ஸ் இல்லாமலும் காரை ஓட்டியிருக்கிறீர்கள். இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.
சல்மான் கானிடம், "நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா" என நீதிபதி கேட்டார். அதற்கு சல்மான் கான், "நான் காரை ஓட்டவில்லை" என்று தெரிவித்தார்.
நீதிபதி தீர்ப்பு வழங்கும்போது, டில்லியில் நிகில் நந்தா என்பவர் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்து வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.
நீதிபதி தீர்ப்பு வழங்கும் போது, சல்மான் கான் கண்களில் கண்ணீர் மல்க அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
கடந்த 2002 செப்டம்பர் 28-ம் திகதி இரவு, தாறுமாறாக ஓடிய நடிகர் சல்மான் கானின் கார் பந்த்ரா பகுதியில் ஒரு பேக்கரியின் வெளியே படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் நூருல்லா மெஹ்பூப் ஷெரீப் என்பவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இவ்வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

அந்தக் காரை நடிகர் சல்மான் கான் ஓட்டியதாகவும், அப்போது அவர் மது போதையில் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், “காரை ஓட்டியது தான் அல்ல. தனது டிரைவர் அசோக் சிங்தான்என சல்மான் கான் தரப்பில் வாதிடப்பட்டது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top