அமைச்சர் ரவி கருநாணாயக்க தொடர்பில்

அரசாங்கத்தின் தீர்மானம் விரைவில்


வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருநாணாயக்க மீது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாகவும் இது தொடர்பில் அரசாங்கம், பொருத்தமான முடிவுகளை விரைவில் எடுக்கும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
மாவனெல்லையில் இன்று  6 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் கபீர் ஹாசிம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கபீர் ஹாசிம் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் மேலும் தெரிவித்ததாவது,
அமைச்சர் ரவி கருநாணயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கான யோசனை முன்மொழியப்பட்டதாக நான் அறிந்தேன். நல்லாட்சி அரசாங்கம் என்ற வகையில் நாம் ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறோம்.
இதுவே, கடந்த ஆட்சியில் நடைபெற்றிருந்தால் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்க மாட்டாது.
நாட்டில் நீதியை நிலைநாட்டுவதற்கு நாம் பூரண இடமளித்திருக்கிறோம். அதனால் இந்த விடயம் தொடர்பில் நாம் எடுக்கும் தீர்மானம் குறித்து ஒரு சில நாட்களில் அறிவிப்போம்.

கடந்த ஆட்சியின் போது ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டோர் ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டபோது அது, அரசியல் பழிவாங்கல் என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட்டது. எனினும் தற்போதைய அரசின் நிலைப்பாடு குறித்து மக்கள் அறிந்து கொண்டிருப்பார்கள்இவ்வாறு அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top