இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேமில் பாலஸ்தீனியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் பலியானதால் மூடப்பட்ட அல் அக்ஸா மசூதி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் அங்குள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாக தீராப்பகை நீடித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டை மீண்டும் தங்கள் வசப்படுத்த பாலஸ்தீனமும், பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமித்து கொள்ள இஸ்ரேலும் முயன்று வருகின்றன.

இதேபோல், இஸ்ரேல் நாட்டு மக்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஜென்மப்பகை நிலவி வருகிறது. முஸ்லிம்களின் மிகவும் பழைமையானதும், மூன்றாவது புனிதத்தலமாகவும் கருதப்படும் அல் அக்ஸா மசூதி இஸ்ரேல் நாட்டில் உள்ள பழைய ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது. இந்த மசூதி ஜோர்டான் அரசின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வருகிறது.

மசூதியின் மேற்குப்புற மதில் சுவரை தங்களது புனித சின்னமாக யூத இனத்தவர்கள் கருதுகின்றனர். ஏழாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த இந்த மசூதியை மீட்பதற்காக பல்வேறு தாக்குதல்களை பாலஸ்தீனியர்கள் நடத்தி வந்துள்ளனர்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்த மசூதியில் ஜும்ஆ தொழுமையில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் இந்த மசூதி அருகே பயங்கர ஆயுதங்களுடன் வந்த மூன்று பாலஸ்தீனியர்கள் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் மீது ஆவேசமாக இயந்திர துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த போலீசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இருதரப்பினருக்கும் இடையிலான மோதலில் இரு போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரி படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்த வந்த மூன்று பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹமவுட் அப்பாஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் தொலைபேசி மூலம் பேசியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இன்றைய தாக்குதலை தொடர்ந்து அல் அக்ஸா மசூதி மூடப்பட்டது. பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இன்று ஜும்மா தொழுகைக்காக வந்த முஸ்லிம்கள் வேறு வழியில்லாமல் அருகாமையில் உள்ள சாலையோரங்களில் தொழுகை நடத்தினர்.

மசூதியில் இருந்து சற்று தூரத்தில் உள்ள டமாஸ்கஸ் கேட் பகுதியில் சாலையோரம் நடைபெற்ற ஜும்ஆ தொழுகைக்கு தலைமை தாங்கிய ஜெருசலேம் நகர தலைமை முப்தி (முஸ்லிம் தலைவர்) முஹம்மது அஹமது ஹுசைன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த தாக்குதலில் எதிரொலியாக மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பழைய ஜெருசலேம் நகருக்கு செல்லும் நாற்புற வாயில்களும் அடைக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த இருநாட்களில் அங்கு நிலவரம் சற்று சீரடைந்ததையடுத்து இன்று இந்த மசூதி மீண்டும் திறக்கப்பட்டது. இதனால், அங்குள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், மசூதிக்குள் சென்று தொழுகை நடத்த யாரும் அனுமதிக்கப்படவில்லை. மதில் சுவரின் பக்கவாட்டில் உள்ள திறந்த வெளியில் சிலர் இன்றைய லுஹர் தொழுகையை நிறைவேற்றினர்.

மசூதி வளாகத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் ஸ்கேனர் கருவிகள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. அந்த கருவிகளை கடந்து மசூதிக்குள் செல்ல எங்களை வற்புறுத்துவதா? என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top