இன்று பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடி

இந்திய நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி (வயது63) இன்று திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளார். இதற்காக டில்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இவ்விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இலங்கை ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு, உள்நாட்டு பிரமுகர்கள் உள்பட 3,000 பேர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்திய குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற முற்றத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 15-ஆவது பிரதமரான நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார்.
இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆப்கன் அதிபர் ஹமீது கர்ஸாய், மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், , பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம், பூடான் பிரதமர் லியோன்சென் ஷெரிங் டோப்கய், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா சார்பில் அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் ஷிரீன் ஷர்மீன் சௌத்ரி ஆகிய தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காபந்து அரசின் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் என சுமார் 3,000 பேர் இப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்திலும் வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கும் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நரேந்திர மோடி பதவியேற்பு விழா மாலையில் நடைபெற இருப்பதையொட்டி "நிகழ்ச்சி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை இணைக்கும் ராஜ்பாத், சௌத் பிளாக் சாலை, காமராஜ் மார்க், அக்பர் சாலை ஆகிய பகுதிகள் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் சீல் வைக்கப்படும். விழாவில் பங்கேற்க வருவோர் நீங்கலாக வேறு யாரும் அப்பகுதி வழியாக செல்ல அனுமதியில்லை' என்று டில்லி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விழாவில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் ஏற்கெனவே முறைப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரதமர் அலுவலகம் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மிக முக்கிய பிரமுகர்கள் வரும் வாகனங்கள் மட்டுமே குடியரசுத் தலைவர் மாளிகை பகுதிக்குள் அனுமதிக்கப்படும். அழைப்பிதழ் வைத்துள்ள மற்ற அனைவரும் ரெய்சினா சாலை, பாஜக தலைமையகம் ஆகிய பகுதிகளில் ஒன்றுசேர்ந்தவுடன் அவர்களை பாதுகாப்புப் படையினர், குழு, குழுவாக பேருந்துகள் மூலம் விழா நடைபெறும் பகுதிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பதவியேற்பு விழாவுக்கு 2 மணி நேரம் முன்னதாகவே தங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட பகுதிக்கு வந்து சேரும்படி விருந்தினர்களுக்கு பிரதமர் அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

விழா நடைபெறும் பகுதியில் அமரும் விருந்தினர்களுக்காக சொகுசு இருக்கைகள் போடப்பட்டுள்ளன. வெளிநாடுகளின் தலைவர்கள் அமரும் பகுதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்யும் பகுதி ஆகியவற்றில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா முடிந்ததும் நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் சார்க் நாடுகளின் தலைவர்களை பிரதமராக பதவியேற்றுக் கொள்ளும் நரேந்திர மோடி 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top