சோதிட ஆலோசனைப்படி
கர்நாடக ஆலயங்களில்
பிரதமர் ரணில் சிறப்பு வழிபாடு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினமும், நேற்றும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளிலும், யாகங்களை நடத்துவதிலும் ஈடுபட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் காலை பெங்களூர் சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலம் மங்களூர் செல்ல திட்டமிட்டிருந்தார்.
சீரற்ற வானிலையால் அவர் தரைவழியாகவே மங்களூர் சென்று, உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் வழிபாடுகளை மேற்கொண்டார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாட்டில் இங்கு சிறப்பு யாகம் ஒன்றும் நடத்தப்பட்டது.
கடும் மழைக்கு மத்தியில் அவர் வழிபாடுகளை மேற்கொண்ட போது, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பாதுகாப்புக்காக கொல்லூர் பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து நேற்று பிரதமரும் அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவும், காசர்கோட்டில், கும்லாவுக்கு அருகே உள்ள பெலா, குமாரமங்கலம் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆலயத்துக்கு ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக நேற்று வந்திருந்தார் என குறிப்பிட்ட குமாரமங்கலம் ஆலயத்தின் பூசகர், சோதிடர் ஒருவர் ஆலோசனையின் பேரிலேயே அவர் வழிபாடுகளை மேற்கொண்டார் என தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நேற்றிரவு கொழும்பு திரும்பினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.