சமூக ஒற்றுமையை வலுவூட்ட

நிரந்தர கட்டமைப்பு இன்றியமையாதது.

–அமைச்சர் ரிஷாட் பதியூதீன்


முஸ்லிம்கள் இத்தனை கொடூரங்களைத் தாங்கிக் கொண்டும் சிங்களச் சகோதரர்களுடன் இணக்கமாகவும் அன்பாகவும் வாழுகின்றார்கள் என்று அந்தச் சமூகம் எண்ணிக் கொண்டிருப்பதை வலுவூட்டும் வகையில் நமது பண்பான செயற்பாடுகள் பெரிதும் அமைய வேண்டும். அதற்கான நிரந்தரமான, நிலையான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் நம்முன்னே எழுந்து நிற்கின்றதென அமைச்சர் றிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் சமகால பிரச்சினை, சமூகங்களுக்கிடையிலான நல்லுறவு,தொடர்பாக குருநாகல் கண்டி றிச் ஹோட்டலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் குருநாகல் கிளை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இங்கு உரையாற்றுகையில் அமைச்சர் றிஷாட் பதியூதீன் பேசுகையில் மேலும் கூறியதாவது,
உலமா சபையும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த நல்லாட்சியை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பை நல்கியவர்கள். பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். நமது சமூகம் படுகின்ற வேதனைகள் துன்ப துயரங்கள் அழிவு மற்றும் நஷ்டங்களில் இருந்து அவர்கள் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த இரு சாராருக்கும் பெருமளவில் இருக்கின்றது. அதே போன்று நல்லாட்சி அரசிடம் சமூகத்தைப் பாதுகாக்குமாறு கோருவதற்கும் எங்களுக்கு அத்தனை உரிமைகளும் இருக்கின்றது. எனவே தான் தற்போது ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையை கருத்திற்கொண்டு உலமாக்களும் அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம். அரசியலுக்கப்பால் இயக்க வேறுபாடுகளுக்கப்பால் கருத்து முரண்பாடுகளை மறந்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியது நமது தலையாய கடமையாக இருக்கின்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பில் அரசியல்வாதிகளை அழைத்து முஸ்லிம் சமூக நெருக்கடிகளைப்பற்றி பல கலந்துரையாடல்களை நடத்தியது. அப்போது அந்த இயக்கத்த்தின் தலைவர் றிஸ்வி முப்தி கொண்டு வந்த சிபாரிசுக்கமையவே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்களும் எம்.பிக்களும் பொறுப்பாக இருந்து இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதற்கிணங்க குருநாகல் மாவட்டத்தின் பொறுப்பு என்னிடம் கையளிக்கப்பட்டது.
 குறித்த கால இடைவெளியில் இவ்வாறான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட போதும் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையினாலும் இஸ்லாத்தின் மீது கொண்ட பற்றினாலும் கட்சி மற்றும் அரசியல் வேறுபாடுகளை மறந்து நீங்கள் இங்கு ஒன்று கூடி இருக்கின்றீர்கள். இந்த மாவட்டத்திலே 24 உலமா சபை கிளைகளும் 34 பொலிஸ் நிலையங்களும் 167 கிராமங்களும் 30 பிரதேச செயலகங்களும் இருக்கின்றன. எனவே 24 மையங்களில் இதன் பொறுப்புக்கள் ஒருமுகப்பட்டு செயற்படுத்தப்பட்டால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கலாம். இதற்கு எனது பங்களிப்பு முழுமையாக இருக்கும்.
இவ்வாறான ஒரு இக்கட்டான கால கட்டத்தில் முஸ்லிம்களாகிய நாம் நமக்குள் இருக்கும் சிறு சிறு முரண்பாடுகள் மற்றும் மதக் கடமைகளை நிறைவேற்றுவதில் கொண்டுள்ள சிற் சில வேறுபாடுகளை பெரிதாக்கிக் கொள்ளாமல் அவைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அவ்வாறான பிரச்சினைகள் இந்த சந்தர்ப்பத்தில் எழுந்தால் மாற்று சமூகத்தவர்கள் இதனால்தான் முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதென்று கூறுவதற்கு அது வாய்ப்பாக அமைந்து விடும். பொலிசாரும் அந்த கோணத்திலேயேதான் பிரச்சினைக்கான தீர்வை தேடிக்கொண்டிருப்பர். இது நமக்கு ஆபத்தாகவே முடிந்து விடும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.
அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்திருக்கின்றது. அதனை நாம் இன்னும் நம்புகின்றோம். முஸ்லிம் சமூகம் பொறுமையை கடைப்பிடிப்பதுடன் எதிர் வினைகளுக்கு ஆட்படாமல் ஒற்றுமையாக வாழ்வதன் மூலம் இந்தப்பிரச்சினைக்கு முடிவு கட்டலாம் இவ்வாறு  அமைச்சர் றிஷாட் பதியூதீன் கூறினார்.
 இந்த கலந்துரையாடலில் ஜம்இய்யதுல் உலமாவின் குருநாகல் கிளை தலைவர் இம்றான் மௌலவி, பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சி. அலவத்துவெல, கூட்டு எதிரணிக் கட்சியின் முக்கியஸ்தர் அப்துல் சத்தார், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் டாக்டர் ஷாபி ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top