திருமணமாகி பத்து வருடங்களுக்குப்பின்
புதுக்குடியிருப்பு பெண்ணுக்கு கிடைத்தது
ஒரே சூழில் மூன்று பெண்குழந்தைகள்

வவுனியா அரச பொது மருத்துவனையில் பெண் ஒருவருக்கு திருமணமாகி பத்து வருடங்களுக்குப்பின்  ஒரே சூழில் மூன்று குழந்தைகள் கிடைத்திருக்கிறது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரம் சிவநகரைச் சேர்ந்த ரமேஸ்குமார் சுமங்களா என்ற 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு மூன்று பெண் குழந்தைகளை சுகப்பிரசவமாகப் பெற்றெடுத்துள்ளார்.
இந்தப் பிரசவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமங்களா என்ற அந்தப் பெண், குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த எங்களுக்கு 3 பெண் குழந்தைகளைக் கடவுள் வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் அவர் ஆசிரியராகப் பயிற்சி பெற்று வருகின்றார். ஒன்றரை வருட காலத்தைக் கொண்ட இந்தப் பயிற்சி நெறியில் ஏழு மாதப்பயிற்சி முடிந்துள்ள நிலையிலேயே அவர் இந்தத் தாய்மைப் பாக்கியத்தைப் பெற்றிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த எனக்குத் திருமணமாகி பத்து வருடங்களாகின்றன. கணவர் ஒரு விவசாயி. அண்மையில் தான் எனக்கு ஆசிரியர் தொழில் கிடைத்தது. மாதம் பத்தாயிரம் ரூபா சம்பளமாகக் கிடைக்கின்றது. ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவாகி 7 மாதங்களாகின்றன. எங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது பெரும் கவலையாக இருந்தது.
இதனால் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் பெரும் பணச்செலவு செய்து வைத்தியம் செய்தோம். நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால், யுத்தச் சூழலில் சிக்கியிருந்த எங்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தலிலேயே அந்த வைத்தியசாலையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆயினும் எங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை.
பின்னர் நாங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் டாக்டர் சந்தன ஹேரத் அவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தேன். நிறைந்த ஆலோசனைகளும் சிகிச்சையும் அங்கு கிடைத்தது. மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைத்தது. இதனையடுத்து இப்போது 3 பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
வைத்திய சிகிச்சையின் போதும், பிரசவத்தின் போதும் வைத்திய நிபுணரும், ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர் பணியாளர்களும் என்னை நன்றாகக் கவனித்தனர். எனக்கு மூன்று குழந்தைகள் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
என்னைப போலவே இந்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த எனக்குத் தெரிந்த இன்னும் இருவருக்கும் பிள்ளை பேற்றுப் பலன் கிடைத்திருக்கின்றது.

குழந்தைகள் கிடைத்துள்ள போதிலும் எனது ஆசிரிய பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வேன். அதற்காக யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து பிள்ளைகளுடன் தங்கியிருந்து எனது பயிற்சியைத் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளேன்.இவ்வாறு சுமங்களா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top