கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின்

தற்காலிக அதிபர் பாடசாலை சமூகத்தையும்,

மாணவர்களையும் ஏமாற்றுகிறாரா?

கல்லூரி பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளர் கேள்வி

(அஸ்லம்)






கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு தற்காலிக அதிபராக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக சேவை III ம் வகுப்பு உத்தியோகத்தரான பீ.எம்.எம்.பதுர்தீன் என்பவர் அப்பாடசாலைக்கு தற்காலிக அதிபராக 01.01.2014ம் திகதிய கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரால் நியமனம் செய்யப்பட்டமை செல்லுபடியற்றது என்ற அடிப்படையில் கல்வியமைச்சு 2016.08.05ம் திகதி அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியை எதிர்பார்த்து தற்காலிக அதிபராக நியமித்தது.

இந்நிலையில் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்ட திரு. பதுர்தீன் தன்னை நிரந்தர அதிபர் என கூறிக்கொண்டு அதற்கான உத்தியோக இலச்சினைகளையும் பாவித்துக்கொண்டு அவர் எழுதும் சகல கடிதங்களிலும் தன்னை சாஹிறாக்கல்லூரியின் நிரந்தர அதிபராகவே காட்டி வருவதாகவும் இது சாய்ந்தமருது மக்களையும் கல்முனை சாஹிறாக்கல்லூரி மாணவர்களையும், ஆசிரியர்களையும், கல்விச் சமூகத்தையும் ஏமாற்றும் செயற்பாடென கல்முனை சாஹிறாக்கல்லூரி பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளர் .எல்.எம்.முக்தார் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கமைய இவர் 01.01.2017ம் திகதி தனது நிரந்தர சேவை நிலையமான கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு அறிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு அறிக்கை செய்யாமை காரணமாக அவரது ஜனவரி மாத சம்பளம் நிறுத்தப்பட்டு பின்னர் அவரது வேண்டு கோளுக்கமைய வழங்கப்பட்டு தற்போது பெப்ரவரி மாதச்சம்பளம் நிறுத்தப்பட்டதுடன் இதுவரை அது வழங்கப்படவில்லை.

இந்நிலையில் திரு.பதுர்தீன் 23.02.2017ம் திகதியிட்டு ஒரு கடிதம் மூலம் தன்னை மத்திய அரசு சேவைக்கு விடுவிக்குமாறு கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாணக்கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு ஊடாக மாகாணப்பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு ஒரு விண்ணப்பமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்திலும் தன்னை ஒரு அதிபராகவே குறிப்பிட்டு சாய்ந்தமருது மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றத் தலைப்பட்டுள்ளார்.

இவ்விண்ணப்;பத்தில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர், மாகாணக்கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் ஒப்பமிட்டமையை ஒரு விடுவிப்பாகக் கருதிக்கொண்டு தான் ஓய்வு பெறும்வரை இக்கல்லூhயிpல் அதிபராகக் கடமையாற்ற கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். அவ்வாறு ஓய்வுபெறும் வரை கடிதம் வழங்கும் ஏற்பாடு கல்வியமைச்சில் உள்ளதா என்பதை அறியாத நிலையில் இவர் கூறுகிறார். மேலும், இதுவரை இவரை மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவோ, ஆளுனரோ விடுவிக்கவில்லை. அவ்வாறு விடுவிப்பதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் 170ற்கு மேற்பட்ட இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு பாரிய வெற்றிடம் நிலவுகிறது.

தேசிய பாடசாலை ஒன்றிற்கு நிரந்தர அதிபர் நியமிக்கப்படுவது முறையான விண்ணப்பம் கோரி அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றி அதனடிப்படையிலேயே நிரந்தர அதிபர் நியமிக்கப்படுவது நிருவாக நடைமுறையாகும்.

இதற்கிடையே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் 06.12.2016ம் திகதி எடுத்த முடிவை உடனடியாக அமுல்படுத்துமாறும், அவரைக் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு மீளவும் அழைத்துக் கொள்ளுமாறு 08.03.2017ம் திகதிய கடிதம் மூலம் கல்வியமைச்சிற்கு அறிவித்துள்ளதுடன் முறைப்பாடுதாரரான எனக்கும் பிரதியிட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சாய்ந்தமருது மக்களின் பூர்வீக சொத்தான இப்பாடசாலைக்கு கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் அல்லது அக்கலாசாலையில் கற்பித்த ஒரு முன்னாள் ஆசிரியர் அல்லது அதிபர் ஒருவர் இப்பாடசாலையில் அதிபராக நியமிக்க வேண்டும் என்பதனை அனைத்துப் பழைய மாணவர்களும் வலியுறுத்த வேண்டும்.

(தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்ட கடிதம், விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் அவரது விண்ணப்பம் இணைக்கப்பட்டுள்ளன)


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top