உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில்
பிரேசில்ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நள்ளிரவு நடைபெறும் முதலாவது அரை இறுதிப்போட்டியில் பிரேசில்ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை கால்பந்து திருவிழா விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் முடிவில் முன்னாள் சாம்பியன்கள் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.
2 நாள் ஓய்வுக்கு பிறகு பெலோஹோரிசோன்ட்டில் இலங்கை நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 1.30 மணிக்கு முதலாவது அரை இறுதி ஆட்டம் நடக்கிறது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி, 3 முறை சாம்பியனான ஜெர்மனியை சந்திக்கிறது.
தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த பிரேசிலும், ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த ஆட்டத்தில் கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளுமே தோல்வியை சந்திக்காமல் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளன. பிரேசில் அணி 11–வது முறையாகவும், ஜெர்மனி அணி 13–வது தடவையாகவும், தொடர்ந்து 4–வது முறையாகவும் அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளன.
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், கொலம்பியாவுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதால் உலக கோப்பையில் இருந்து வெளியேறினார். 4 கோல்கள் அடித்த அவர் அணியில் இருந்து விலகி இருப்பது பிரேசிலுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்றதால் பிரேசில் அணியின் கேப்டன் தியாகோ சில்வா இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் விளையாட முடியாது. இதுவும் பிரேசில் அணிக்கு இழப்பாக கருதப்படுகிறது. அவர் மீதான தண்டனையை குறைக்க வேண்டும் என்று பிரேசில் அணி நிர்வாகம், பிபாவுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. இதில் முடிவு சில்வாவுக்கு சாதகமாக வர கடினம் தான் என்று கூறப்படுகிறது.
பிரேசில் அணியில் ஹூல்க், ஆஸ்கர், டேவிட் லூயிஸ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஆடும் அவர்கள் நெய்மார் இல்லாத குறையை போக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெய்மருக்கு பதிலாக நடுகள வீரர் வில்லியன் ஆடுவார் என்று பிரேசில் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் பெலிப் ஸ்காலரி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி அணியில் 4 கோல்கள் அடித்த தாமஸ் முல்லர், மெசுத் ஒசில், ஸ்வாடிக்கர், பிலிப் லாம் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். இவர்களின் தாக்குதல் ஆட்டம் , பிரேசில் அணிக்கு நிச்சயம் குடைச்சல் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் ஜெர்மனி அணியின் நேர்த்தியான பாஸ்க்கு இணையாக எந்த அணியும் செயல்படவில்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. பாதுகாப்பு அரண் ஆட்டம் மட்டுமின்றி அந்த அணியின் கோல்கீப்பர் மானுவேல் நெயூரின் செயல்பாடும் அபாரமாக இருக்கிறது. இதனால் ஜெர்மனி அணி எல்லா வகையிலும் பிரேசிலுக்கு சிம்மசொப்பணமாக விளங்கும் எனலாம்.
2002–ம் ஆண்டில் இறுதிப்போட்டியில் பிரேசிலிடம் தோல்வி கண்ட ஜெர்மனி அணி, கடந்த இரண்டு போட்டியிலும் (2006, 2010) முறையே இத்தாலி, ஸ்பெயின் அணிகளிடம் அரை இறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. அரை இறுதி தோல்வி மீண்டும் அரங்கேறக்கூடாது என்பதில் ஜெர்மனி அணி அக்கறை காட்டும் என்பதில் அய்யமில்லை. ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் இன்னும் ஒரு கோல் அடித்தால், உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர் ரொனால்டோவின் (15 கோல்கள்) சாதனையை தகர்க்க முடியும்.

சர்வதேச போட்டியில் இதுவரை பிரேசில்ஜெர்மனி அணிகள் 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பிரேசில் அணி 12 முறையும், ஜெர்மனி 4 முறையும் வென்று இருக்கின்றன. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. உலக கோப்பையில் (2002–ம் ஆண்டு இறுதிப்போட்டி) இரு அணிகளும் ஒரே ஒருமுறை சந்தித்து இருக்கின்றன. இதில் பிரேசில் அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ஜெர்மனி அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top