கல்முனை மாநகர சபையின்
பிரதி முதல்வராக பிர்தௌஸ் சத்தியப் பிரமாணம்!
(அஸ்லம் எஸ்.மௌலானா)

(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக எம்.ஐ.எம்.பிர்தௌஸ், மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளார்.
இது தொடர்பான வைபவம் இன்று 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.நசார்தீன், ஏ.அமிர்தலிங்கம், எம்.ஜெயக்குமார், கே.விஜயரட்ணம், கமலதாசன், ஏ.எச்.எம்.நபார், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அஸுஹர், கணக்காளர் எச்.எம்.றசீட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுச் செயலாளர் எம்.எம்.றபீக் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக மாநகர முதல்வர் செயலகத்தில் முதல்வர் நிஸாம் காரியப்பர் முன்னிலையில் பிரதி முதல்வராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட எம்.ஐ.எம்.பிர்தௌஸ், அதனைத் தொடர்ந்து பிரதி முதல்வர் அலுவலகத்திற்கு வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு முதல்வர் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பிர்தௌஸ், தனது ஆதரவாளர்களினால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.எம்.ஆதம்பாவா ( துஆ)ப் பிரார்த்தனையை நடாத்தி வைத்தார். ,
சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், அக்கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளராகவும் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றார்.
1994ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கல்முனை பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு கல்முனை மாநகர சபை உறுப்பினராக தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது

.







0 comments:
Post a Comment